Tuesday, October 9, 2012

அந்த நிமிடம்




சுவாசத்தை உள்நோக்கி கவனிக்க
சுகமாக பயணிக்கும் சிந்தனைகள்
சுத்தமாய் சத்தமில்லாமல் துடிக்கும் இதயம்
நதிநீராய் தவழும் உதிரணுக்கள்
முடிச்சுக்கள் மெல்ல அவிழ

மகிழ்ச்சி மொட்டுகள் வெடித்து பிரபஞ்சம் நிறைக்க
உள்ளங்கையில் கடலை அடக்கி இறுமாப்பு கொள்ள
புல்நுனியில் படர்ந்த பனித்துளியில் கண்ணயற
விண்நோக்கி சிறகுகள் விரித்து பறக்கிறேன்.

விரித்த சிறகிற்குள் நியாபக இறகுகள்
விரிவாக காட்சியளிக்க,அத்துனையும்
அசைபோட்டு ஆணவம் தொலைக்கிறேன்

கடந்த நொடியின் வீச்சம் மனதை அடைக்க
தயங்கியே முடிக்கிறேன் பயணத்தை.
அந்த நொடியில் எல்லாம் அடைந்தும்
ஏதுமில்லாதவளாய் இலகுவாகிறது மனம்
     
 

மருட்சியில்லாமல் மனம்


தூரலில் நனைந்தபடி
தூரமாக நீயிருக்க
தூக்கம் கலைந்த குழந்தையாக
துளி கண்ணீர் விடுகிறது
மனம் உன் நிழலுக்காக
தூவிய துளிகள்
தூங்காத நெஞ்சத்தின்
தூதாக மாறியதால்
துன்பங்கள் கரைந்தோட
துள்ளிக் குதிக்கிறது மனம்.

மனதின் மொழியறிந்து
மலர்ந்து அருகில் நீ வர
மருட்சியில்லாமல் மனம்
மகிழ்ச்சியில் ஆழ்கிறது

Saturday, October 6, 2012

சுவாசமே நானாவேன்


இறுக்கங்களை வெடிவைத்து தகர்த்து
சந்தோஷ துகள்களாக பறக்கவைக்கிறாய்.
நழுவிச் செல்கிறேன் கைகளிலிருந்து
இறுகப்பற்றி இணையாக இருக்கிறாய்
வறண்ட குளத்தில் மழையாக பொழிந்து
உணர்ச்சிகளுக்கு உயிரூட்டுகிறாய்.
வானவில்லாய் ஒரு நொடியில்
வர்ணஜாலங்கள் காட்டி விழிமயங்க
வைத்து கடமையென மறைந்தே போகிறாய்.

உன்னை நினைவுகளால் உயிரூட்டி
உன் வாசத்தை சுவாசித்தே
உயிர்வாழ்கிறேன் உலகினிலே.
உன் கடமைகள் கரைந்த பிறகு
சுவாசமே நானாவேன் என்ற நம்பிக்கையில்
காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறேன்

ஓரங்க நாடகம்


ஒற்றை முத்தத்திற்காக நீயாடும்
நாடகங்கள் இதழ்களின் ஓரத்தில்
புன்னகையை தவழ விடுகிறது.

ஓரக் கண்ணால் ஓங்காரமாய்
இரசித்தவிட்டு காணாததாய் நகர்கிறேன்.
கோபத்தின் உச்சியில் மலைஏறி
கொடிபிடிக்கிறாய் யுத்தத்திற்காக.

முன்நெற்றியில் இதழ்களால் சமாதான
ஒப்பந்தம் போட்டு ஓடவிரட்டுகிறேன்
கோபங்களை, மெளனச்சிறையிலிருந்து
விடுதலை பெறுகின்றன வார்த்தைகள்.