Wednesday, September 26, 2012

பாரமுகம்


கூட்டினில் கூடி வாழ்ந்த
குருவிகள் பறந்தே போயின.
காடு வீடாய் மாறின
கானங்கள் முகாரி யாகின.
முற்றத்திலே முல்லை வளர்த்து
முகமலர முகிலை அழைக்க
பாரினில் துளிகளை சிந்திவிட்டு
பாரா முகமாய் சென்றன

பார்வையே


காலை நேரத்திலே சருகுகள் குவிந்த சாலை ஓரத்திலே
தணல் மூட்டியே தடயம ழித்தினர் ஒரு கணத்திலே
கன்னி மனத்திலே எரிமலையாய் எழுந்த சினத்தையே
தணியச் செய்ததே காதல் பெருக்கும் காளையுன் பார்வையே
 

துளி விஷம்

 
 
 
 
கடலினை யென்ன செய்யுமென
ஒருதுளி நஞ்சினை கலந்தனர்.
கடலே விஷமாக உருமாற
உருகி தவிக்கின்றனர் இன்று.
பிறர்மீது பழிகூறி பிதற்றினரே
பிழையே தனதென்பதை மறந்து.
தனது பிழைகளை களைந்தபின்னே
பிறர்பிழை காண்பது நன்று.

Monday, September 24, 2012

புலரும் பொழுது

 
 

புலரும் பொழுதினில் மலரும்
மொட்டுக்களின் இதழ்வழி கசியும்
ஏகாந்தத்தை விழிவழி பருகி
பசியாருகிறேன் பரவசமாய்.
பரவசம் பரவி உதிரத்தில்
கலந்து புத்தியில் நிறைந்து
இதழ்களில் படிகிறது புன்னகையாக

காலைப் பொழுதின் ஒவ்வொரு
அசைவையும் உற்று நோக்க ஆயிரம்
கற்பனைகள் உயிர்த் தெழுகின்றன.

விநாடிக்கு விநாடி புதுமுகம் காட்டி
மாயாஜாலம் செய்யும் இயற்கையை
இரசித்தபடி காட்சிகளை விழிகளில்
சிறைப்பிடிக்கிறேன் இரசிகையாக......

Tuesday, September 18, 2012

மனம்



மனம் பேசத் துடித்தாலும்
இதழ்க் கதவைத் திறக்க
முடியாமல் தவிக்கும் வார்த்தைகள்
வெளிவருகின்றன கண்கள் வழி
ஒற்றை கண்ணீர் துளியாய்

கண்ணீர் துளியை விரல் நுனி
ஏந்தி மொழிபெயர்க்கையில்
சமாதி கட்டுகிறது மனஸ்தாபத்தை
அன்பை அருவியாக கொட்டி

அருவியில் மூழ்கியெழுந்தபின்
அத்துணையும் அழகாக புலப்பட
அளவிளா இன்பத்தை அனுபவித்து
அமைதியாக அடங்குகிறது மனம்.
 

Monday, September 17, 2012

மலரும் நினைவுகள் -6

 

எங்கள் வீடு

 
 
 



அந்தக் கணம் மனம் சந்தோஷ வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. கார் மிக மெதுவாக நகர்வது போல் ஓர் உணர்வு.பல வருடங்களுக்குப் பிறகு எங்கள் வீட்டைப் பார்க்க சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு செல்கிறோம். மனம் முழுக்க எங்கள் வீட்டைச் சுற்றியே வலம் வந்து கொண்டு இருந்தது.பயணம் ஆரம்பித்தது முதல் எங்கள் வீட்டுப் புராணத்தையே பாடிக் கொண்டிருந்தேன்.மகனும் கணவரும் பொறுமையாக கேட்டுக் கொண்டே வந்தார்கள்.

பல வருடங்களாக ஒரே தெருவில் எல்லோரும் வாழ்ந்து வருவதால் அத்தைவீடு, சித்தப்பா வீடு என்று முறை வைத்தேதான் அழைப்போம். எங்களுடையது நான்கு வீடுகள் கொண்ட காம்பவுண்ட் வீடு. எங்கள் காம்பவுண்ட்க்குள் நுழைந்தவுடன் இருக்கும் சிறிது காலியிடம் இருக்கும். அதில் வண்டிகள் நிறுத்திவைத்து இருப்பார்கள்.

அங்கே இரண்டு வீடுகள் இருக்கும்.வீட்டின் முன்புறம் நான் வளர்த்த முல்லைச் செடி,பக்கத்து வீட்டில் இருந்து என்னை தினமும் நலம் விசாரிக்கும் நந்தியா வட்டப்பூ, இன்னொரு பக்கத்து வீட்டில் இருந்து தென்றலால் தாலாட்டும் தென்னை மரம் இன்னமும் பசுமையாக நினைவுகளில் நிழலாடுகின்றன. முதன் முதலில் எங்கள் முல்லை பூத்த போது நான் பண்ணிய ஆர்ப்பாட்டங்கள் இன்னும் இரகசியமாய் காதோடு  ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

அருகில் சிறிய சந்து இருக்கும், அதில் நுழைந்து வெளிவந்தால் கண்ணில் முதலில் தென்படுவது அழகாய் பசுமையாக வளர்ந்து இருக்கும் செடிகள் அதன் பக்கத்தில் நம்மைக் கவர்வது எங்கள் வீட்டு கிணறு. எங்கள் வீட்டின் பின்வாசல் வழியாக அங்கே நேராக செல்ல முடியும்.அதன் எதிர்புறம் இரண்டு வீடுகள் வரிசையாக அமைந்து இருக்கும்.

செடிகளில் முதலில் நம் கவனத்தை ஈர்ப்பது, கடவுளுக்காகவே தினமும் பூக்கும் செம்பருத்தி செடி தான். அதன் அருகில் 3 அல்லது 4 வாழை மரங்கள் இருக்கும்.வாழைக் குலை தள்ளும் போது அதைப் பற்றிய பேச்சாகவே இருக்கும்.எந்த திசை என்ன பலன் என்று ஒரு பெரிய மாநாடே நடக்கும்.அதன் பக்கத்தில் பப்பாளி மரம் இரண்டு இருக்கும்.

அருகில் தக்காளிச் செடி,கீரை வகைகள் கொத்தமல்லி என பாட்டி பதியமிட்டு இருப்பார். அதன் பின்னால் இருக்கும் இடம் எங்கள் இராஜ்ஜியம். எங்களுக்கு பிடித்த செடிகளை கொண்டு வந்து நட்டு வைத்திருப்போம்.அதில் பிரதான இடம் ரோஜாவுக்கு உண்டு. கிணற்றில் இருந்து தண்ணீரை இறைத்து தினமும் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது எங்கள் வேலை.

எங்கள் துவைக்கிற கல்லை அறிமுகப்படுத்த மறந்துவிட்டேன்.எனது தோழி என்று கூட சொல்லலாம் அதை. மிகுந்த துக்கமோ,சந்தோஷமோ தஞ்சம் புகும் இடம் இந்த துவைக்கிற கல் தான். அதில் அமர்ந்து தான் கல்கியையும்,பாலகுமாரனையும் அறிமுகம் செய்து கொண்டேன். சூரிய உதயத்தையும், மாலை நேரத்தில் சூரியன் மறையும் அழகையும் துவைக்கிற கல்லின் மீது அமர்ந்து பார்க்கும் சுகமே அலாதி தான்.

எனது ஒவ்வொரு அசைவையும் பதிந்து வைத்திருக்கும் எங்கள் வீடு. எனது தாத்தாவுடன் அமந்து பேசிய இடங்கள்,அத்தை சித்தப்பாவுடன் விளையாடிய இடங்கள், அம்மா பாரதியின் பாடல்களை அறிமுகப்படுத்திய இடங்கள், தங்கையுடன் செல்லச் சண்டைகள் (நிஜமா சொன்னா இரத்தம் பார்க்காம ஓயாது எங்க சண்டைகள்) போட்ட இடங்கள். அப்பாவின் கைப்பிடித்து நடைபழகிய இடங்கள், கற்பனைப் பாத்திரங்களாய் மாறி வசனங்கள் பேசிய இடங்கள் அனைத்தும் மனதில் படம் போல் விரிந்து இதழ்களில் புன்னகையை குடியேற வைத்தது. மகனிடம் அந்த இடங்களை எல்லாம் காண்பிக்க வேண்டும் என்ற ஆசை அணை கடந்த வெள்ளம் போல் பெருகி வழிந்து கொண்டிருந்தது.

எங்கள் வீதியை அடைந்ததும் இனம் தெரியாத உணர்ச்சிகள் ஆக்கிரமிக்க ஆரம்பித்தன மனதை. தார் சாலையில் சமாதியாகி இருந்தன எங்கள் பாதச் சுவடுகளைத் தாங்கிய மணல்கள். முக்கால்வாசி ஓட்டு வீடுகள் மாடி வீடுகளாக உருமாறி இருந்தன. எல்லாம் மாறி இருந்தது,எங்கள் வீடு முற்றிலும் வேறு உருவம் எடுத்திருந்தது. அடையாளங்கள் எல்லாம் சிதைக்கப்பட்டிருந்தன. மனதில் ஏதோ ஒரு தீர்மானமான முடிவு உயிர்பெற்றுக் கொண்டிருந்தது. வீடு நெருங்கியவுடன் காரின் வேகத்தை மெதுவாக குறைத்தார் ஓட்டுனர்.

“அண்ணா,நிறுத்த வேண்டாம் போங்கள்” என்ற எனது கரகரப்பான குரல் எல்லோரையும் ஒரு நிமிடம் அதிர வைத்தது.

”அனி என்னாச்சு,இவ்வளவு தூரம் வந்துட்டு வீட்டிற்குள் போக வேண்டாமுனு சொல்லர” என்று ஆச்சரியமாக கேட்டார் கணவர்

“இல்லமா,போலாம்” எனது குரலில் தெரிந்த ஏதோ ஒன்று அவரையும் மெளனமாக்கியது.திருப்பூர் நோக்கி கார் திரும்பியது.அமைதி மட்டுமே அங்கே நிலவியது.

எல்லோரும் விசித்திரமாக என்னை பார்க்க,எனக்கோ எதையோ மனதில் பசுமையாக வைத்த திருப்தி இருந்தது.


கல்கியின் வாசகி



சில வருடங்களுக்கு முன் மாமல்லபுரம் சென்ற போது மாமல்லர், மகேந்திர பல்லவர்.சிவகாமியின் எண்ணங்களே மனதை ஆக்கரமித்து இருந்தன.அந்த மனிதர்களின் பாதச் சுவடுகள் படிந்த இடம் இது என்ற எண்ணமே மனதில் மின்னலடித்துக் கொண்டிருந்தது. அவர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த இடம் எப்படி இருந்திருக்கும் என்ற எண்ணவோட்டம் மனதில் ஓடியது. பல ஆயிரம் சிற்பிகள் வேலை செய்ய, உளியின் ஓசை விடாமல் கேட்டுக் கொண்டே இருந்திருக்கும். எத்தனை சிற்பிகளின் உழைப்பு,

அன்று அவர்கள் யோசித்து கூட பார்த்து இருக்க மாட்டார்கள் இத்தனை காலம் கடந்தும் அவர்களின் உழைப்பு உயிரோடு இருக்கும் என்பதை. இரவு பகல் பாராமல் சிற்பம் செய்வதை தவம் போல் செய்திருப்பதை ஒவ்வொரு கல்லில் செதுக்கிய சிற்பமும் பறைசாற்றுகிறது.

மெதுவாக கால்கள் மண்ணில் புதைய நடந்த போது அவர்களின் பாதங்களையும் இந்த மண்கள் தீண்டி இருக்கும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. கூடவே கல்கியின் நினைவும் மனதில் தோன்றுவதை தடுக்க இயலவில்லை. வெறும் மதிப்பெண்களுக்காக மட்டுமே மனனம் செய்து கொண்டிருந்த சோழ, பல்லவ சாம்ராஜ்ஜியங்களை இரசித்து இரசித்து படிக்க வைத்த பெருமை கல்கியையே சாரும்.

திருமணம் ஆன புதிதில் தஞ்சாவூர் பெரிய கோவில் சென்ற போது கோவில் என்பதையும் மீறி இராஜ இராஜ சோழன் சுவாசமே அங்கே நிறைந்திருப்பதை போன்ற ஒரு பிரம்மை தோன்றியது. இது கல்கியின் எழுத்துக்கள் செய்த மாயம். கல்கி படைத்த பாத்திரங்களை பற்றி பேசவே நட்புகளை துழாவிய காலங்கள் உண்டு. பாத்திரங்களின் தன்மைகளைக் குறித்து பெரிய விவாதமே நடக்கும் நட்பு வட்டத்தில்,.

“அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல் தான் பொங்குவதேன்” என்ற பாடல் இளமையாய் இன்றும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.அவரின் ஆராய்ச்சி அசர வைக்கிறது.சோழர்கள்,பல்லவர்கள் பற்றி அறிந்ததை கட்டுரையாக குடுக்காமல் அழகிய நாவலாக படைத்து அதில் அவர்களை உயிருள்ள பாத்திரமாக நடமாட வைத்து நமது மனங்களை கொள்ளை அடித்து இருப்பார்.

இலங்கையில் உள்ள வீதிகளையும்,விழாக்களையும் எழுத்துக்களால் கண்முன் கொண்டு வந்திருப்பார். பூங்குழலி கதாபாத்திரம் மனதில் சொல்லமுடியா பாதிப்பை ஏற்படுத்தியது.அவளின் இரவு நேரம் படகுப் பயணத்தில் நாமும் சேர்ந்தே பயணித்து இருப்போம்.

ஒரு எழுத்தாளனின் மகத்தான வெற்றி படித்து பல காலம் ஆகியும் அவரது எழுத்துக்கள் மனதை விட்டு அகலாதிருப்பது தான்.நான் பார்த்து வியந்த முதல் எழுத்தாளர் கல்கி அவர்கள்.ஒவ்வொரு சரித்திர நாவலிலும் அவரது மெனக்கெடல் நன்றாகத் தெரியும்.

இராச இராச சோழனையும்,மாமல்லனையும் நினைவு கூறும் பெருமை தஞ்சைக்கும் மாமல்லபுரத்திற்கும் இருந்தாலும் அவர்களை நன் மனதில் உயிரோடு நடமாட வைத்த பெருமை கல்கியையே சாரும் என்பது மறுக்க முடியாத உண்மை.

Saturday, September 15, 2012

விழிதாங்கிய வினாக்களுக்கு விடைதேடி

 
 
 


நிந்தன் கோபத் தாகத்திற்கு காதல்மொழிகள்
பலியாகி வறண்டு கிடக்கிறது மனம் பாலைவனமாக
உன் நினைவுகளை உயிரில் சுமந்து, அமைதித்
தூதுவனாக நம் காதலை அனுப்புகிறேன்.

காரணமும் தெரியாமல் செய்யப் போகும்
காரியமும் புரியாமல்,வானம் நோக்கும்
பூமியாக தவமிருக்கிறேன் உன் வருகைக்காக.

மெல்லினமாய் இசையெழுப்பிய நீ இன்று
வல்லினமாய் மாறி இம்சிக்கிறாய் - வருந்தி
உள்ளத்தில் ஊமையாய் அழுவதை அறியாயோ

களிப்பாவில் துவங்கிய நம் பயணம் எங்கேயோ
தளை தட்டி முகாரி ராகம் இசைக்கிறது.
வாய்ப்பாட்டில் அடங்குவாயா?
வரம்புதாண்டும் செம்மறியாடாவாயா?
காலத்தின் முன் நிற்கிறேன் - நிராயுதபாணியாய்
விழிதாங்கிய வினாக்களுக்கு விடைதேடி.

 


கற்பனைகளுக்கு உருவம் தந்து


என் கற்பனைகளுக்கு உருவம் தந்து
உன் பெயரை சூட்டிக் கொள்கிறேன்.
விரும்பிய படி உனைத் தீட்டிக் கொள்கிறேன்.

அமைதியாக அணுஅணுவாக இரசிக்கும்
உனக்கு சன்மானமாய் பெருமழையாய்
என் அன்பை உன்னுள் பொழிகிறேன்.

என் கனவுகளுக்கு மேடையாகிறாய்.
நான் நடத்தும் நாடகத்தில் உன்னை
பாத்திரமாக்கி உன் வழி என்
எண்ணங்களுக்கு உயிர் கொடுக்கிறேன்

உன்னுள் கரைந்து வெளிவருவதால்
உன் சாயங்களைப் பூசிக் கொண்டே
வெளி வந்து விழுகிறது என் எழுத்துக்கள்.

காணவில்லை என் கவிதைகளை

 
 
காணவில்லை என் கவிதைகளை
உயிரற்ற வெறும் வார்த்தைகள் மட்டுமே
உலா வருகின்றன உன் பார்வைக்காக.
நீரின்றி காயும் பூமியாக வாடும் இதயத்துள்
தேடுகையில் தொலைந்தே போகிறேன் நானும்.

உன் நினைவுகளெனும் கயிற்றை பற்றியபடி
ஒவ்வொரு அடியாய் நகர்கிறேன் உனை நோக்கி.
நெருங்கிவிட்டதாய் நினைக்கையில் மேகத்துள்
மறைந்த தூரத்து நிலவாய் சிரிக்கிறாய்.......

கடக்க வேண்டிய தூரங்கள் கண்களுக்கு
எட்டா தொலைவாக இருக்க சோர்ந்து,
பிடியை விடுகிறேன் என்னையறியாமல்
நிற்கிறேன் தொடங்கிய இடத்திலேயே.
 
மீட்பாய் எனற மனக்கோட்டை மெதுவாய்
சிதைந்து துகள்களாய் காற்றினில் கரைய ,
கடைசி சுவாசத்தில் என் வாசத்தை நிரப்பி
உன்னிடம் அனுப்புகிறேன் என் நேசத்தை சொல்ல.
 

சிறைப்பிடித்து


நின் கண்களெனும் அம்புகள் பட்டு
கண்ணங்களில் சிவப்புபூக்கள் பூத்து
செவ்வானமாய் காட்சியளிக்கிறது.

வண்டாக தேனை மிச்சமின்றி பருகி
பரவசத்தை கொட்டுகிறாய் என்னுள்.
தேனிருந்த இடத்தை அன்பால்
இட்டு நிரப்புகிறாய் நிறைவாக.

அடர்த்தி அதிகமாகியதில் தள்ளாடி
சாய்கிறேன் உன் தோள்களிலே.
கைகளுக்குள் சிறைப்பிடித்து சிறகுகளை
விரித்து பறக்க வைக்கிறாய் வானில்.

எதிர்பார்ப்பில்லா உன் பாசத்தில்


இன்னதென்று புரியாத சோகங்கள்
இதயத்தை முழுதாய் நிரப்பி
இருட்டாக்கும் போது உனையே
இருளைப் போக்க அழைக்கிறேன்.
அன்பெனும் விளக்கை நீ ஏற்றி
அரவணைக்கையில், வெளிச்சமாகி
அழகாய் ஒளிர்கிறது உள்ளம்
அன்றலர்ந்த மலர் போல்..

எதிர்பார்ப்பில்லா உன் பாசத்தில்
எதிர்ப்புகளே இல்லாமல் பயணித்து
எனக்கான சிம்மாசனத்தில் அமர்ந்து
எல்லா நொடியும் ஏகாந்தத்தில் மிதக்கிறேன்.

விடைபெறுமுன்


 
விடைபெறுமுன் ஆயிரம் நாடகமாடுகிறாய்
காலத்தை கடத்துவதற்காக, ஊமையாய்
இரசித்து விட்டு உள்ளுக்குள் சிரிக்கிறேன்.

கடிகார முள்ளை கண்களாலேயே சிறைசெய்து
காலத்தை சிறைப்பிடிக்க எத்தனிக்கும்
உன் செயலில் தெறிக்கும் அன்பில்
நனைந்து மலர்கிறது மனமொட்டு.

பிணைந்த விரல்களில் ஆயிரம் கவிதைகள்
தீட்டி உதிரத்தில் கரையச் செய்கிறாய்.
கடைசி சுவாசத்தில் எல்லாம் கொட்டத்
துடிப்பது போல் ஒரு நொடிக்குள்
கடலளவு அன்பைக் கொட்டுகிறாய்.

அன்பின் வெப்பத்தை தாங்காது உயிர்
உருகி கண்ணீராக கன்னங்களில்
பெருக்கெடுக்க, உன் விரல்களால்
அணைபோடுகிறாய் அணைத்தபடி.
 
பிரியா விடை பெறுகிறேன் பிரியத்துடன்.
பிரியும் நொடி முத்தப்பூ விதைத்து
இதழ்களோடு இரகசிய ஒப்பந்தம்
போடுகிறாய் அடுத்த சந்திப்புக்காக.

மனதில் உன் நினைவுகளை சுமந்துபடி
கண்களில் உன் உருவத்தை சுமந்துபடி
உயிரினில் உன் காதலை சுமந்துபடி
விடைபெறுகிறேன் உன்னிடம், அடுத்த
சந்திப்பிற்கான கனவுகளை சுமந்த படி.......................
 

விடை தெரியா கேள்விகளுடனே


விடை தெரியா கேள்விகளுடனே
விடை பெறுகிறேன் உன்னிடம்.

காலங்கள் நமது நினைவுகளை
மங்கிப் போன புகைப்படமாக்கினாலும்
கலங்கிப் போன குளத்தில் அரைகுறையாக
தெரியும் பிம்பம் போல் நமக்குள் நாமிருப்போம்

நினைவு அடுக்குகளில் நம்மை பிரிய வைத்த
பிரச்சனைகள் அயுள் இழக்கலாம் ஒரு நாள்.

அன்று தெளிந்த குளமாய் மனம் மாறி
அருகாமைக்காய் ஏங்க வைக்கும் போது
பூமி நோக்கி ஓடிவரும் மழைபோல் வந்து
துளியாய் கடலில் கலப்பேன் என்ற நம்பிக்கையுடன்
விடைபெறுகிறேன் சொல்லாமலே

காத்திருப்பேன் எனத் தெரிந்துமே


 
காத்திருப்பேன் எனத் தெரிந்துமே
மெளனம் காக்கிறாய் அழுத்தமாய்.
வார்த்தைகளை வெளியே தள்ளி
கருணைக் கொலை செய்கிறேன்
உனக்கான வார்த்தைகள் மட்டும்
உயிருடன் வாழ்ந்து கொல்கிறது.

உன் பாதை தவிர்க்க கால்கள்
எங்கெங்கோ உலா போகின்றன
அங்கேயும் கண்கள் துழாவுவது
உன் பாதச் சுவடிகளையே........

எல்லாமறிந்தும் ஏதுமறியாதது போல்
நாடகமாடுகிறாய். உன் நாடகத்தில்
ஊமை பாத்திரமாக உலா வருகிறேன்.

எல்லாம் உடைத்து உன்னருகில்
ஓடிவரவே மனம் துடித்தாலும்
ஏதோ தடுக்கிறது என்னை....
 
உன் பிரியத்தை அறியும் பரிட்சையில்
விடை தெரியாவிட்டாலும் காத்திருக்கிறேன்
முழுமதிப்பெண்களுடன் உன் வரவுக்காக
 

மாயம் புரிகிறது உன்னால்


 
உன் புன்னகையின் பிண்ணனியும்
உன் துக்கத்தின் காரணமும்
நானென்ற இரகசியம் அறிந்தே
வினாக்களோடு உலா வருகிறேன்.
எதிர்பாரா சூழ்நிலையில்
எதிர்பார்த்த விடையளித்து
திக்குமுக்காட வைக்கிறாய்

திணறி நான் நிற்கையிலே
உதிர்த்துவிட்டு செல்கிறாய்
மர்மப் புன்னகையை
எதுவுமே நடவாதது போல்

நீ கண்ணங்களில் ஏற்றிய
சிவப்பு நிறத்தை மறைக்க
தடுமாறுகையில் மேலும்
சிவப்பேற்றுகிறாய் ஒரு
ஒற்றை முத்தத்தில்....
விடைதெரிந்த வினாக்களும்
வாழ்வை சுவாரசியமாக்கும்
மாயம் புரிகிறது உன்னால்

Saturday, September 1, 2012

கடலில் கலக்கும் துளிபோல



உன் ஒற்றை விளிப்பில் பனிபோல் மனமுருக
கடல் தேடி ஓடும் நதியாய் வந்தடைகிறேன்.
 

அலைகளை அறிமுகப்படுத்துகிறாய்.
துள்ளும் மீன்களை நட்பாக்குகிறாய்.
திமிங்களங்களிடம் திராணியின்றி தவிக்கையில்
திடமாய் எதிர்க்க கற்றுக் கொடுக்கிறாய்.
 

நண்டுகளின் நர்த்தனங்களை நிம்மதியாய்
இரசிக்க வைக்கிறாய் அருகிருந்து.
சங்குகளின் நாதத்தில் மெய்மறக்கவைக்கிறாய்.
மூச்சு முட்ட முத்துக்களை அள்ளச்செய்கிறாய்.
 

ஒவ்வொரு செல்களையும் பூக்கவைக்கிறாய்
பேரின்ப அமைதியில் ஆழ்த்துகிறாய்.
கடலில் கலக்கும் துளிபோல
காணாமல் போகிறேன் உன்னுள்.


சிறகினையசைத்து

 
சிறகுகளுக்குள் சிறைபிடிக்க நினைக்கிறேன்
காற்றாய் சுழன்றடித்து சுகமூட்டும் உன்னை
சிறகுகளை இழக்கிறேன் காற்றின்வேகத்தில்
இழந்த சிறகுகள் இமைக்கும் நேரத்தில்
கண்விட்டு அகல கலங்குகிறேன்........
 
சிறகுகளை மீட்கும் முயற்சியில் எனைத்
தோல்விகளே முத்தமிட்டுச் செல்கின்றன.
இயலாமையின் உச்சத்தில் கோபச் சிறகு
வேகமாய் வளர்ந்து எனை மூடுகிறது.....
 
மூடிய சிறகின் வெப்பத்தில் வெந்து
வெறுப்பு விதை விதைக்கிறேன்.
கசந்த நினைவுகளை தோண்டியெடுத்து
உரமாக்குகிறேன் அவ்விதைக்கு.
இராட்சஷன் போல் வளர்ந்து
உயிர்வாழ்க்கிறது என் உயிர் குடித்து.
 
தனிமை போதிமரமாய் போதனைகள்
பல கூற வேரோடு வெட்டுகிறேன்
இராட்சஷ  வெறுப்பு மரத்தை........
பாசத்தீயில் கோபச் சிறகுகள் உருகி
காணாமல் போக உயிர்த்தெழுகிறேன்
 
அன்பெனும் பல வண்ணச் சிறகுகள்
அடர்த்தியாய் முளைக்க அழகாய்
இசையமைக்கிறேன் சிறகினையசைத்து
சிறைபிடிக்கும் எண்ணம்தவிர்த்து..............