Sunday, November 25, 2012

கனவே நீதானென்பதை


மலைகளின் முகடுகளில் தடம் பதித்து
விலகும் முகில்களாக கணநேரத்தில்
மறைந்து போகிறாய், நினைவுகளை
நினைவுச் சின்னமாக விட்டுவிட்டு.
 
ஒவ்வொன்றாக அசைபோட்டு
தேடுகிறேன் நூல்கண்டாக
நிறைந்திருக்கும் நினைவுகளின் நுனியை.

முதல் துளியின் பரவசத்தை மனதில்
இட்டு நிரப்புகிறது உன்னுடனான
மணித்துளிகளின் தடயங்களெல்லாம்.

செல்லரித்துப்போன என் கனவுகளை
நினைவாக்க, எனைப்பிரிந்த நீ,
எப்போது உணர்வாய் இப்பொழுது
என் கனவே நீதானென்பதை......

பயணிக்கிறேன்


காற்றில் திசை மறந்தே பறக்கிறேன்
இலக்குகள் இல்லாமலேயே.

அனுபவங்கள் என்னும் பாடங்கள்
மெருகேற்றி உருமாற்றியது என்னை
சுமைகளை இறக்கிய பின் சுகமாக
பறக்க முடிகிறது இலகுவாய்

எனைப்படிக்கும் ஆவலில் கை நீட்டி
காத்திருக்கும் அன்பான கைகளில் தஞ்சம்புக
தேடியே பயணிக்கிறேன் தொய்வேயில்லாமல்

பாராமுகமாய்


பற்றிவிட தோணவில்லை பறக்கும் போது,
கண்ணில் துளிர்த்த துளி கலக்கமும்
கரைந்தே போனதே மறைந்தவுடன்,
கனவுகளின் சிதைந்த கோலம்
காட்சியாக கண்முன் பறக்க,
மெளனமாகச் சிந்திய கண்ணீர் துளிகள்
மண்ணோடு சமாதியாகிறது சத்தமேயில்லாமல்

இருந்து விட்டுச் சென்றதன்
தடயங்களை தடவுகையில் மேலெழுந்த
உணர்ச்சியைப் பாகுபடுத்த இயலவில்லை
மகிழ்ச்சியென்றும் ,துக்கமென்றும்

திரும்பாதென்று தெரிந்த பின்னும்
சேருமிடம் அறியும் ஆவலை
அடக்க இயலவில்லை முற்றிலுமாய்.
 
பற்றியிருந்த காலங்கள் பார்த்துப் பார்த்து
பரவசமான மணித்துளிகள் பிரசவித்த
எழுத்துக்களை பாசமாய் தடவியபடி
பயணம் தொடர்கிறது பாராமுகமாய்
 

என் அன்பினை



சிதைந்த கனவுகளுக்கு
சமாதிகட்டிய பிறகு
சமாதானமாகாத மனம்
சிந்துகிறது ஒற்றைத் துளி கண்ணீரை

மூடிய இமைகளுக்குள் உலாவிய
ஒற்றைக் கண்ணீர் மடை திறந்ததும்
இமைமுடிகள் நனைத்து தடையற்று
கன்னம் கடந்து காணாமல் போகிறது.

இமைமுடியின் ஈரப்பசை
மெளனமாய் பறைசாற்றுகிறது
உன்மீதான என் அன்பினை.


Thursday, November 22, 2012

காலைப் பொழுது



புலரும் பொழுதுகள் அறிவதில்லை
கலைக்கப்பட்ட கனவுகளின் வலியை.
கண்விழித்த சில நொடிகள்
கரைகிறது கனவின் வீச்சத்தோடே

அடிக்கடி பார்க்கும் கண்மலர்களால்
சில மணித்துளிகளுக்கு பரபரப்பை
பூசிக் கொள்கிறது கடிகார முட்கள்

பரபரப்புகள் அடங்கியபின் நீண்ட
அமைதியை போர்த்திக் கொள்கிறது காலை.
கண்மூடி காலைக் கனவை துழாவுகையில்
துடைக்கப்பட்ட கரும்பலையாக காட்சியளிக்கிறது.
 
அறைகளில் பரவும் திடீர் அமைதி
தனிமையை இட்டு நிரப்புகிறது மனதில்.
தனிமை வீணையின் நரம்புகளை மீட்டி
ஒலியெழுப்புகிறது சில நினைவுகள்.

நினைவுகளின் பாதையில் பயணிக்கையில்
தட்டி எழுப்புகிறது மயங்கிய மனதை
அடுத்த வேலைக்கான அழைப்பு........
 

விடியல்


விடியலின் வருகையை இனியகுரலில்
பறைசாட்டுகிறது முகம்தெரியா
ஒரு பறவையின் குரல்.

அலைபேசியின் அலாரத்தில் கண்விழித்த
எரிச்சலை அழகாக விலக்கி
மகிழ்ச்சியை இட்டு நிரப்புகிறது.

இடைவெளி விட்டு ஒலிக்கும் குரலின்
கிறக்கத்தில் மெதுவாக அவிழ்கிறது
மனமொட்டு மணம்பரப்பிய படி.....

பதிலுக்கு குரலெழுப்பி நன்றிசொல்ல
துடிக்கும் இதயத்தை நகரும்
கடிகார முட்கள் கட்டிப் போடுகிறது.

பேதை மனது


 
கவிதை குளத்தில் தூண்டிலில் சிக்கும்
வார்த்தைகள் எல்லாம் உந்தன் வாசனை
பூசியே வெளி வந்து விழுகின்றன.

வார்த்தைகளின் வீச்சில் நீயே நீக்கமற
நிறைந்திருக்க தவிர்க்க முடியாமல்
தவித்தே தள்ளி நிற்கிறேன்

தள்ளி நிற்கையில் சிந்தையில் நிறைந்து
யாதுமாகி நானறியாமல் இதயத்தில்
சிம்மாசனமிட்டு ஆட்சி செய்கிறாய்.

எதிர்கட்சியாக காலம் கடத்த எத்தனிக்க
எனை வஞ்சித்து உனக்காகவே வக்காலத்து
வாங்குகிறது பேதை மனது.