Wednesday, December 28, 2011

மாறிய நாதம்

எங்கிருந்தோ ஓர் நாதம்
செவி வழியே இதயம் நிரப்ப
ஒவ்வொரு அணுவும் ஆனந்த கூத்தாட

மனதின் பூரிப்பை இதழ்கள் காட்ட
மகிழ்ச்சி பூக்கள் எங்கும் பூக்க
வண்ணத்து பூச்சியானேன்.......

சுகமான நாதம் லயம் மாறி
இதயம் கிழிக்க....

வண்ணங்கள் இழ்ந்த வானவில்லானேன்

நாதத்தின் தன்மையும் மாறும் காலம் எப்போதோ??
வண்ணங்கள் கூடும் நேரம் தான் வருமோ??

மண்டியிடுகிறேன் காலத்தின் முன் கேள்விக்குறியோடு.......


மழை

இருட்டிய வானம்
இருளைப் போர்த்தி கொள்ள
என்னையும் அறியாமல்...

வேகமெடுத்த கால்களில்
வீடுசேரும் வேகம்
மழை வருமுன்

பைக்குள் குடையை
தடவியது கைகள்...!
மனமோ மழையின்
வருகையை எதிர்பார்த்தபடி...

ஒரு துளி கைகளில் பட...
சந்தோச வெள்ளம் மனமெங்கும்

மழை தூரல்கள்.....

சடசடவென மேனி நனைக்க
மனம் மத்தாப்பாய் பூரிக்க
நடை மெதுவாக....

முழுதாய் மழையில் நனைந்தபடி
நான்....!!

குடையை விரிக்க மனமில்லாமல்....

ஆராய்தல்

வானம் ஆராய பிரபஞ்சம் தெரியும்
மனம் ஆராய கடவுள் தெரியும்
எழுத்தை ஆராய எண்ணங்கள் தெரியும்
செயல்கள் ஆராய காரணங்கள் தெரியும்
அன்பை ஆராய சுயநலம் தெரியும்
தோல்வி ஆராய வெற்றியின் வழிகள் தெரியும்
துன்பம் ஆராய வாழ்க்கையின் சூச்சமம் தெரியும்
முறிவை ஆராய புதிய தொடக்கம் தெரியும்
ஆராய்ந்தால் நிரந்தரமில்லை ஏதும் என்று தெரியும்

உடைந்த பிம்பம்

மலராய் இருப்பாயென அகமகிழ்ந்திருக்க
முள்ளாய் கீறுவதேன்....

தென்றலாய் வீசுவாயென எதிர்பார்த்திருக்க
புயலாய் மாறியதேன்....

இசையாய் இருப்பாயென நானிருக்க
இடியாய் இறங்கியதேன்...

மழைச்சாரலாய் வீழ்வாயென மகிழ்ந்திருக்க
புயல் மழையாய் புண்படுத்துவதேன்...

பூமியைப் போல் பொறுமை காப்பாய் என்றிருக்க
எரிமலையாய் சீறுவதேன்...

சுபராகமாய் குளிர்விப்பாயென செவிசாய்த்திருக்க
அபஸ்வரமாய் மீட்டுவதேன்...

கலங்கரை விளக்காய் வழிகாட்டுவாயென காத்திருக்க
சுனாமியாய் தாக்குவதேன்...

கர்ப்பகிரகமாய் அருள்புரிவாயென இறுமாந்திருக்க
பொருட்காட்சி பொம்மையானதேன்...

வேறுபாடுகள் கலைவாயென கனவுகண்டிருக்க
மெளனமாய் இருப்பதேன்...

வார்த்தைகள் தொண்டையில் சடுகுடு ஆட
சோகம் இதயத்தில் நர்த்தனமாட
பேரலையில் சிக்குண்ட படகாய் புத்தி தள்ளாட
செய்வதறியாமல் மனம்...

Tuesday, December 27, 2011

கனவு கண்டோம் நாங்களும்

கனவு கண்டோம் நாங்களும் ......அன்று
நாட்டையே உருமாற்றும் ஒரு அக்னிக்குஞ்சாக....
அநியாயத்தை தட்டிக் கேக்கும் ஒரு தலைவியாக......
எல்லோரும் வியக்கும் ஒரு மனிதனாக.........
விண்ணுலகையும் ஆளும் ஓர் தேவதையாக.......

இன்றோ
காலத்தின் கைகளில் வெறும் தலையாட்டி பொம்மையாய்,
எண்ஜான் வயிற்றுக்கு இலட்சியத்தை விற்கும் மேதாவியாய்,
சுயநலமே தலைதூக்கும் குடும்ப தலைவியாய்,
போராட்டமே இல்லாத மண்புழுவாய்.

நதி நீரில் மிதக்கும் இலைபோல
எதிர்த்து போரிடவும் எண்ணமின்றி
கழிகிறது காலம்.......
இன்னும் கனவுகளுடனே.......

Friday, October 28, 2011

மாற்றங்கள்

இளமைகளில் துளிர்விடும் போராட்ட குணம்
தற்காப்பாகிறது முதுமைகளில்,

குருகுலத்தில் பெருக்கெடுத்த அறிவின் ஊற்றுகள்
வற்றிய கிணறுகளாகிறது பள்ளிகளில்,

காட்டாற்று வெள்ளமென ஆர்ப்பரிக்கும் மனம்
நதியாகிறது சுயம் தேடலில்,

எரிமலையென வெடிக்கும் கோபம் கூட
அன்பெனும் மழையாகிறது புரிதலில்,

தனதென்பதால் அமுதசுரபியாய்  வழியும் அன்பு
நீர்த்துப் போகிறது பொதுவுடமையில்,

தெரிதலில்  பொங்கும் ஆர்ப்பாட்டம்
அமைதியாகிறது அறிதலில்.

மயான அமைதி

நானெனும் அகங்காரம்
உடைந்த போது

பெரியவனெனும்
பிம்பம் சிதைந்த போது

எதுவுமே எனதில்லையென
தெரிந்த போது

எதையும் ஆள முடியாதென
உணர்ந்த போது

பிரபஞ்சத்தின் சிறு புள்ளியென
தெளிந்த போது

ஆட்டுவிப்பவன் ஒருவனென
புரிந்த போது

தான் ஒன்றுமில்லையென
அறிந்த போது

மனம் போர்த்தியது
மயான அமைதியை

Tuesday, October 18, 2011

பாக பிரிவினை

பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது வரும் சந்தோஷம், போகும் போது யாருக்கும் இருப்பதில்லை. 5 ஆம் ஆண்டு படிக்கும் நமது நாயகி அனுராதாவும் இதற்கு விதி விலக்கு இல்லை. டியூசனுக்கு போவதற்கு முன் சிறிது நேரம் விளையாட வேண்டி பள்ளி முடிந்ததும் ஓடி வந்தாள் வீட்டிற்கு.
வீட்டின் முன் கிடந்த பல ஜோடி செருப்புகள் அவளது புருவத்தை உயர்த்தின.அதில் அவளுக்கு பிரியமான அத்தையின் செருப்பை பார்த்ததும் மனம் சந்தோஷத்தில் திளைத்தது.
“அத்தைஎன்று கத்தி கொண்டே உள்ளே ஓடினாள்.அங்கே அத்தையின் வறண்ட சிரிப்பு தான் பதிலாக கிடைத்தது.அதற்குள் அம்மா அவளை கூப்பிட்டார்கள்.
“அனு,பெரியவங்க பேசர போது அங்க போய் தொந்தரவு பண்ணாதே
“ஏன்மா,அத்தை வரத என்கிட்ட சொல்லலஅம்மாவை கோபித்து கொண்டாள் அனு என்கிற அனுராதா.
“பேசாம சாப்பிட்டு விட்டு போய் விளையாடு,இன்னைக்கு டியூசன் போக வேணாம்
எப்பவும் அத்த வந்தா டியூசன் போகமாட்டேன் தான, விளையாட போகல அம்மா, எனக்கு அத்தை கிட்ட பேசனும்
“அனு,சொன்ன பேச்ச கேளு,இப்ப போய் தொந்தரவு பண்ணாத,திவ்யா வீட்ல விளையாடு,எல்லாம் முடிஞ்சதும் நானே கூப்பிடறேன்
அனுவிற்கு ஒன்றும் புரியவில்லை.அத்தை வீட்டிற்கு வந்தால் அவர்களை விட்டு ஒரு நிமிடம் கூட பிரியாமல் இருப்பாள்.இன்று அம்மா பேச்சை தட்ட மனமில்லாமல் திவ்யா வீட்டிற்கு சென்றாள்.
அத்தைக்கு திருமணம் ஆகும் வரை எல்லாம் அத்தை தான் அவளுக்கு. சாப்பாடு ஊட்டுவதில் தொடங்கி படுக்கும் போது கதை சொல்வது வரை எல்லாம் அத்தை தான். அடி பட்டாலோ,ஏதாவது வலி வந்தாலோ அத்தையிடம் தான் ஓடுவாள்.
அத்தை சொல்லும் கதைகள் அனுவிற்கு மிகவும் பிடிக்கும்.அதுவும் அவளைப் பற்றிய கதைகள் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
அனு கட்டை விரல் அளவு தான் இருப்பாளாம் குழந்தையாய் இருக்கும் போது.அனுவை அத்தை குளிக்க வைக்கும் போது ஒரு நாள் காணாமல் போய் விட்டாளாம்.
தேடிப் பார்த்தா ,தண்ணீர் போற ஓட்டை வழியா தோட்டத்திற்கு போய்ட்ட குட்டி நீ அத்தை.
“அப்புறம் என்னை எப்படி கண்டு பிடிச்சீங்க அத்தை
“என்கிட்ட இருந்த பெரிய பூத கண்ணாடி வைச்சுதான் தான் குட்டி உன்ன தேடினேன்.என்ன பார்த்ததும் ஓடி போய் பூக்குள்ள ஒளிஞ்சுட்ட நீ
அப்புறம்
“ரொம்ப நேரம் தேடி பார்த்து,நீ கிடைக்காம போக, அத்த அழ ஆரம்பச்சுட்டேன், அப்ப நீ பூக்குள்ள இருந்து என்னை கூப்பிட்ட,அப்படியே உன்னை வாரி அனைத்து முத்தம் குடுத்தேன் 
“ரொம்ப அழுதையா அத்த
அத்தையை கட்டிக் கொண்டு தான் தூங்குவாள் அனு. நிறைய கதைகளின் முடிவுகள் சொல்லும் முன் தூங்கி விடுவாள்.
அத்தை கிட்ட கண்டிப்பா இன்னைக்கு கதை கேட்கனும் என்று நினைத்துக் கொண்டே திவ்யாவின் வீட்டிற்க்குள் சென்றால் அனு.
“அனு, சொத்து பிரிக்கராங்களா உங்க வீட்டுள இன்னைக்குதிவ்யாவின் அம்மா ராணி
“அப்படினா என்ன மாமி
“ஒன்னுமில்ல போய் விளையாடு
திவ்யாவுடன் விளையாடினாலும் மனம் அத்தையை சுற்றியே வந்தது. கவலையான அத்தையின் முகமே நியாபகம் வந்தது. நேரம் செல்ல,செல்ல அவளுக்கு அத்தையை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றியது.
மாமி ,நான் வீட்டிற்கு போறேன்
வேண்டாம் அனு, அம்மா வரும் வரை இங்கேயே இரு
“எனக்கு அத்தையை பார்க்கணும் “அழ ஆரம்பித்தாள் அனு
அதே நேரம் அனுவின் அம்மா வானதி உள்ளே நுழைந்தார்.
“எல்லாம் நல்ல படியா முடிஞ்சுதா வானதி
“ஒரு வழியா முடிஞ்சுது மாமி,அவர் கோபமா இருக்கார்,அனுவை கூட்டிட்டு போறேன்,நாளை சொல்லறேன் எல்லாம்
அனு அத்தையை பார்க்க வேகமாக ஓடினாள் வீட்டிற்கு. வெறும் வீடு மட்டுமே வரவேற்றது அனுவை.
சாப்பிடாமல் அத்தை வேண்டும் என்று அழுது கொண்டே தூங்கும் மகளை பார்த்து திகைத்த படி நின்றனர் அனுவின் பெற்றோர்.

Monday, October 17, 2011

கொல்லும் மெளனம்

கண்ணுக்கு தெரியாத ஓர் சுவர்
மெதுவாய் எழுகிறது நமக்கிடையில்,

உடைத்திட மனம் விளைந்தாலும்
ஏனோ மெளனமாய் நான்.

பழகிய நாட்கள் மனதில்
நிழற் படமாய் ஓட

உன் நட்பை இழக்கும் தைரியம்
இல்லாமல் நான்

வார்த்தைகள் தேடுகிறேன்
என்னை உனக்கு உணர்த்த

தேய்பிறையாகும் நம் நட்பை
வளர்பிறையாக்க வழி தெரியாமல் நான்

திருவிழாவில் தொலைந்த குழந்தை போல்
நீ இல்லாமல் விழிக்கிறது என் மனம்

எனது ஒவ்வொரு முயற்ச்சிக்கும் உனது
விமர்சனத்தை எதிர்நோக்கிய படி நான்

மெளனம் கொல்வாயா இல்லை
மெளனமாய் இருந்து எனைக் கொல்வாயா

எதுவாய் இருந்தாலும் உன் அடி
தொடர தயாராய் நான்








இறப்பு

என்னை மிகவும் பாதித்த ஒருவரது மரணத்தை பற்றி இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.எனக்கு சிங்கபூரில் அறிமுகமான முதல் நபர் ”நர்மதா”.
எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும்,முகம் நிறைய புன்னகையுடன் வலம் வரும் அவரை பார்த்து பலமுறை அதிசியத்ததுண்டு. நான் சோர்ந்து போகும் தருணங்களில் உற்சாகமான வார்த்தைகளால் ஆறுதல் கூறியவர்.
வாழ்க்கையில் நிறைய சாதிக்க வேண்டும் என்று உழைக்கும் அவரை கண்கள் விரிய நிறைய நாட்கள் பார்த்து வியந்து இருக்கிறேன்.
போன வருடம் டிசம்பர் மாதம் புது வீடு வாங்கிய சந்தோஷமான செய்தியை என்னுடன் பகிர்ந்து கொண்டார். ஊரிலுருந்து வந்த பிறகு வீட்டிற்கு வருவதாய் சொன்னேன்.தனது புது வீடு பற்றியும்,அதற்காக தான் வாங்கிய பொருட்களை பற்றியும் மகிழ்ச்சியுடன் விவரித்தார்.அவரிடம் இருந்த உற்சாகம் என்னுள்ளும் ஒட்டிக் கொண்டது.
மணிகனக்காக பேசிய பிறகு விடைப் பெற்றேன் அவரிடம்.
ஜனவரி மாதம் ஊரிலுருந்து வந்தவுடன் அவரிடம் தான் முதலில் பேசினேன்.
புது வீடு போய் 20 நாட்கள் ஆகி விட்டதாகவும், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்.
ஜனவரி மாதம் 27 ம் தேதி காலை 10 மணி அளவில் வந்த செய்தி என்னை நிலைகுலைய செய்தது.ஆம் நர்மதா அவர்கள் இறந்து விட்டார்கள் என்ற செய்தி இடியென என் காதுகளில் விழுந்தது.ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை.பதறி அடித்து ஒடினேன்.
தூங்குவது போல் அமைதியாக இருந்தது அவரது முகம். நான் பார்த்து வியந்த பெண்மணியின் உடலை கண்களில் கண்ணீர் வழிய பார்த்தவாறு நின்று கொண்டு இருந்தேன்.
இது தான் வாழ்க்கை என்று எனக்கு புரிய வைத்த மரணம்.
எதுவும் நிரந்தரமில்லை என்ற உண்மையை உரக்க சொன்ன மரணம்
எனது கர்வங்களை உடைத்தெரிந்த மரணம்
எனக்கு வாழ்க்கை பாடம் கற்றுக் கொடுத்த “நர்மதா”அவர்களின் மரணம்

Thursday, October 13, 2011

சிந்தனைத் தோழன் – தாத்தா

அன்று அந்த அறை மிக அமைதியாக இருந்தது. வழக்கத்திற்கு மாறான அமைதி. நானும் தாத்தாவும் இருந்தால், பேசிக்கொண்டேயிருப்போம். இன்று கண்கள் மூடி அமைதியாய்ப் படுத்து இருந்தார். முகத்தில் பெரிய சிந்தனை தெரிந்தது.அவரது கைகளை பிடித்தபடி அமர்ந்திருந்தேன்.

“வலிக்குதா தாத்தா” 100வது முறையாகக் கேட்டேன்.

“இல்லடா அனிக்கண்ணூ” என்று தாத்தா சொன்னாலும் அவரது வலியை உணர முடிந்தது.

அவரது பெட்டிக்குள் இருந்த ஓலையை எடுத்துத் தரச்சொன்னார்.

அது அவரது ஜாதகம். நிறையமுறை அவர் படிக்கும்போது அருகில் இருந்திருக்கிறேன். “இதில் எழுதி இருக்கிற மாதிரியேதான் என் வாழ்க்கையில் நடக்கிறது அனிம்மா” என்று பல முறை வியந்திருக்கிறார்.
இப்ப எதற்குக் கேட்கிறார் என்ற குழப்பத்துடனேயே எடுத்துக் கொடுத்தேன்.

அமைதியாக படித்துவிட்டு...... அம்மாவை கூட்டி வரச் சொன்னார்.

“எனக்கு நேரம் வந்திருச்சுமா” என்றார்.
“என்ன மாமா சொல்றீங்க” அம்மாவின் கண்களில் கண்ணீர்.

நான் தாத்தாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். மரணத்தைப் பற்றியும் நிறையப் பேசியிருக்கிறோம். ஆனாலும் தாத்தாவின் மரணம் தாங்கமுடியவில்லை. மறு பிறப்பில் அவருக்கு நம்பிக்கையில்லை.


”சக்கரம் சுத்தும்போது சத்தம் வருது, அது சுத்துறத நிறுத்திய பிறகு சத்தம் எங்கு போச்சுனு ஆராய்ச்சி பண்ணறதுல எனக்கு விருப்பமில்லை, மனம் சம்மதிக்காமல் மரணம் வராது அனி” என்றார்.

”என்னை விட்டுப் போய்ருவிங்களா” என்றேன்.
”மனம் வராது அனிமா, உன் கண்கள் கலங்கினால் மரணத்தை விரட்டிவிடுவேன்” என்று சொல்லி தாத்தா சிரித்தது நியாபகம் வந்தது.
”என்னை விட்டு போகமாட்டேனு சொன்னீங்களே” அழுதுகொண்டே கேட்டேன்.
“நீ அழும்பொழுது போகமாட்டேன்”என்றார்.ஏதோ மனதில் பாரமாய் அழுத்த தாத்தா தூங்கும் வரை அவருடனே இருந்தேன்..
எனக்கு மகாபாரதத்தை சொல்லிக்குடுத்தார். பிறகு ஒருநாள் என்னைக் கதை சொல்லச்சொன்னார். பாண்டவர்கள் ஐந்து பேர் என்று ஆரம்பித்தேன். ”ஏன் ஐந்து பேர்” என்றார். புரியாமல் விழித்தேன். ”யோசிடா.....ஏன் ஐந்து?” என்றார்.
”கதைய மட்டும் படிக்காதடா...என்ன சொல்ல எத்தனிக்கிராங்கனு யோசி”
”ஐம்புலன்கள்தான் பஞ்சபாண்டவர்கள்.” என்றார்
”கெளரவர்கள்?” என்றேன்
”நமது குணங்கள்” என்றார்
”கண்ணன்?” என்றேன்
”மனம்” என்றார்
”அப்ப மனம்தான் கடவுளா?” என்றேன்”கேள்வி கேள், உன்னை நீயே கேள்... அமைதியா யோசி.... காலப்போக்கில் எல்லாம் புரியும்” என்றார். எனக்கு ஒவ்வொன்றையும் சிந்திக்க கற்றுக்கொடுத்துவர். எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை.

 காலையில் கண் விழித்தபொழுது வீடே அமைதியாய் இருந்தது. தாத்தா அன்றைய பேப்பர் படித்துக் கொண்டு இருந்தார். முகத்தில் சோர்வு நிறைய இருந்தது.
தாத்தாவை தொந்தரவு செய்யாமல் எனது வேலைகளைச் செய்து கொண்டு இருந்தேன். காலை உணவை எடுத்துக்கொண்டு தாத்தாவிடம் சென்றேன்.அவரால் அதிகம் பேச முடியவில்லை.

“வலி இன்னும் இருக்குதா தாத்தா?” என்றேன்.

”அதிகமாகுதுடா” என்றார்.
காலை உணவை அவருக்கு ஊட்டிவிட்டேன். அவர் அருகிலேயே அமர்ந்து இருந்தேன். ஏதோ மனதில் இனம் புரியாத பயம். கண்களில் கண்ணீர் வழிந்தோட அவரையே பார்த்துக் கொண்டு இருந்தேன்.
“அழாதடா......எதுவும் மாறாது நான் இல்லை என்றாலும்”

“விட்டுட்டு போகாதிங்க”

“உலகத்துல எதும் நிரந்தரமில்லை”

ஏதும் பேசவில்லை நான். அவர் அருகிலேயே இருந்தேன். நகர்ந்தால் போய்விடுவார் என்ற பயம்.

”நீ போய்ட்டு ஒரு மணி நேரம் கழித்து வா அனிம்மா”

“போக மாட்டேன்”

“முடியல கண்ணம்மா, போ, எல்லாம் சரி ஆகிடும்”

“என் கூடயே இருந்தரலாம் தான?”

“இருப்பேன்டா”

“நிசமா?”

“உனக்காகவே, உன் கூடயே இருப்பேன்டா”

“சரி, கொஞ்ச நேரம் கழித்து வரேன்”

”சரிடா, நிறைய நல்ல புத்தகம் தேடிப் படி”

“நீங்க இருக்கீங்க தானே?, நல்ல புத்தகத்தை தேடி குடுக்க”

என்னை விட்டுப் போகமாட்டார் என்ற எண்ணம் மகிழ்ச்சி தர அவ்விடம் விட்டு நகர்ந்தேன். ஒரு மணி நேரம் கழித்து தாத்தாவின் அருகில் சென்றேன் மதிய உணவை எடுத்துக் கொண்டு.

எந்த சலனமும் இல்லாமல் இருந்தார். அழுகையோடே தாத்தா என்றேன். அதற்குள் எல்லோரும் வந்தார்கள். அம்மா அருகில் வந்து ”தாத்தா நம்மள விட்டுட்டு போய்ட்டாரு” என்றார்.

ஒன்றும் புரியவில்லை எனக்கு. தாத்தா பொய் சொல்ல மாட்டார்.

 “பொய் சொல்லி மத்தவங்களுக்கு வேணா நல்லவன் ஆகலாம், ஆனா மனசாட்சிக்கு” என்பார்.

இன்றும் எனக்கு யாராவது நல்ல புத்தகங்களை பரிந்துரை செய்யும் பொழுது தாத்தாவின் உருவம் என் கண்களில் தோன்றி மறைவதை ஆச்சரியத்துடன் பார்க்கிறேன்.

ஆமாம், தாத்தா என்றும் பொய் சொல்ல மாட்டார்.

Wednesday, October 5, 2011

சுயம் தேடல்

தனிமையை நேசிப்போம்.
மெளனத்தை இரசிப்போம்.
மனதை உற்று நோக்குவோம்.
சுயமதிப்பீடு செய்வோம்.
மனசாட்சியின் முன் நாம் குற்றவாளியாவோம்.
வக்கீலாக வாதாடாமல் தவறு எங்கே என்று ஆராய்வோம்.
ஆராய ஆராய மனசாட்சி நம்மை வழிநடத்தும்.
மனசாட்சி உயிர்ப்பாக இருந்தால் மனிதம் வாழும்.
மனிதம் வாழ உயிர்களை மதிக்கும் திறன் பெருகும்.
மற்ற உயிர்களை உற்று நோக்க இயற்கையின் சூட்சமம் புரியும்.
இயற்கையின் சூட்சமம் புரிய மொழி மறந்து போகும்.
மொழி மறக்க உணர்வுகள் ஆளப்படும்.
சந்தோஷமோ,துக்கமோ,குரோதமோ உற்று நோக்கப் படும்.
உற்று நோக்க எல்லாம் மாயை என புலப்படும்.
காரியத்தின் காரணங்கள் விளங்கும்.
காரணங்கள் விளங்க பிறப்பின் சூட்சமம் வெளிப்படும்.
பிறப்பின் சூட்சமம் வெளிப்பட கடமைகள் நமக்கு உணர்த்தப்படும்.
கடமைகள் உணர, அதன் வழிகள் தெளிவாக விளக்கப்படும்.
இயற்கையின் துணையோடும்,இறையின் அருளோடும் கடமைகள்
செவ்வனே நிறைவேற்றப்படும்.
வாழ்க்கை சுகமாகும்.

Friday, September 2, 2011

தவம்


கண்மூடி அமர்வதா தவம்
மனம் ஒருமுகப்படுத்துவதே தவம்

கோபம் அடக்குவதா தவம்
காரணம் அறிந்து கோபம் தணிப்பதே தவம்

வெற்றி கோட்டை தொட உதவுவதா தவம்
வெற்றி கோட்டை நிர்ணயம் செய்வதே தவம்

ஒரு வேலை முழுமனதுடன் செய்வது தவம்
எண்ணம் ஆராய்தல் தவம்

பொறாமை இல்லாத மனம் தவம்
எதிர்பார்ப்பு இல்லாத அன்பு தவம்

ஆதலால் தவம் செய்வோம் வாரீர்

ஒற்றை ரோஜா

மெதுவாய் சிரித்தது ஒற்றை ரோஜா
மனிதர்களை எண்ணி..........
கல்லறையை அலங்கரித்தபடி.........

மெதுவாய் சிரித்தது ஒற்றை ரோஜா
இருக்கும் போது அருமை உணராமல்
இறந்த பிறகு கண்ணீர் வடிக்கும்
அவளின் மனதை எண்ணி.......

மெதுவாய் சிரித்தது ஒற்றை ரோஜா
காதல் என்ற ஒரு பக்கத்திற்காக
வாழ்க்கை என்ற புத்தகத்தை எரித்துவிட்ட
அவனின் முட்டாள்தனத்தை எண்ணி

தாயின் அருமை



நான் தாயான பொழுது உணர்ந்தேன்
எனது தாயின் வலியை

நான் மகனுக்காக துடிக்கும் பொழுது உணர்ந்தேன்
எனது தாயின் உணர்வினை

நான் தாயான பிறகு நேசிக்கிறேன்
எனது தாயை இருமடங்காய்

Saturday, August 27, 2011

இன்னும் எத்தனை காலம்


 
சுயசிந்தனையற்ற ஆட்டுமந்தையாய்
இருக்கும் எண்ணத்தோடு

பணத்திற்க்காக தனது சுயத்தை
இழக்கும் எண்ணத்தோடு

துக்கமோ,துரோகமோ  நம் வீட்டு கதவை
தட்டினால் மட்டுமே போராடும் எண்ணத்தோடு

வீட்டைச் சுற்றி வறுமை இருந்தாலும் தான்
மட்டும் அறுசுவை உண்ணும் எண்ணத்தோடு

தனது தலைமுறைக்கு பணத்தை மட்டுமே
சொத்தாக சேர்த்தால் போதும் என்ற எண்ணத்தோடு

மற்றவர்களின் தியாகங்களிலே நமது
வாழ்க்கையை அனுபவிக்கும் எண்ணத்தோடு

சுற்றுச் சூழல் பற்றி சிறிதும் கவலையில்லாமல்
தன் செளரியத்தையே முன்னிருத்தும் எண்ணத்தோடு

இன்னும் எத்தனை காலம்
இருக்க போகிறோம் இப்படியே.........

சிந்திப்போம்......செயல்படுவோம்.............
மாற்றத்திற்கான முதல் அடி நமதாக இருக்கட்டும்.


Friday, August 26, 2011

இருப்பாயோ

இருப்பாயோ என்னுடன்
என் ஆருயிர் மகனே.......

என் பல் விழுந்து, முடி நரைத்து,
நடை தளர்ந்து, துவழும் காலத்தில்
ஆலம் விழுதென உடன் இருப்பாயா
இல்லை
பணம் பெரிதென வேறு தேசம் சென்று
என்னை நிலை குழைய வைப்பாயா
துணை தேடும் காலத்தில் என் சொல் கேட்பாயா?
இல்லை
இவள் தான் துணை என அறிமுகம் செய்வாயா?

நான் விரும்பும் பாதையில் என் கைப்பிடித்து செல்வாயா?
இல்லை
உன் பாதையில் என் கைப்பிடித்து அழைத்து செல்வாயா?


என்னை தோழியாய் ஏற்றுக் கொள்வாயா?
இல்லை
நண்பர்களுக்காக என்னை தனிமையில் விடுவாயா?

 
எப்படி நடந்தாலும் என் செல்ல மகனே
என் வாழ்வு என்றும் உன்னை சுற்றியே.....


நீயரியாயோ

நீயரியாயோ.....
என் மெளனத்தின் அர்த்தங்களை
என் மனதின் மொழியை…..
எங்கே மலரும்
எங்கே வாடும்
எங்கே கருகும்
அறிந்தவன் தானே நீ.......

ஒவ்வொரு முறையும் விளக்கம்
கேட்ட படி நீ
மெளனத்தில் நான்

எனக்கும் மெளனம்
கலைக்க ஆசை தான்.

என் மனதை பிரதிபலிக்கும்
கண்ணாடியாய் வார்த்தைகள்
தெரிந்தால்...............

காலம் விந்தையானது

நதியாய் ஓடினேன்,

காற்றாய் வீசினேன்,

மேகமாய் தவழ்ந்தேன்,

நெருப்பாய் உதிர்ந்தேன்,

மணலாய் தவம் இருந்தேன்.

எதோ ஒரு வெறுமை.

காலத்திடம் கேட்டேன் ஏன் இந்த வெறுமை என்று.

அன்பு இல்லாததால் என்றது

அன்பு என்றால் என்ன என்றேன்.

அனுபவித்து பார் என்று தாய் தந்தையை தந்தது.

அன்பில் திளைத்தேன் நான்.

மீண்டும் வெறுமை சிறிது காலத்திற்கு பிறகு.

காலத்திடம் கேட்டேன் ஏன் இந்த வெறுமை என்று.

 சிறிது சண்டை போட,எண்ணம் பகிர்ந்து கொள்ள யாரும்

இல்லாததால் என்று சகோதிரியை தந்தது.

செல்ல சண்டை ,பகிர்தலில் திளைத்தேன் நான்.

மீண்டும் வெறுமை சிறிது காலத்திற்கு பிறகு.

காலத்திடம் கேட்டேன் ஏன் இந்த வெறுமை என்று.

உனக்காக ,உனக்காக மட்டும் என்று யாரும்

இல்லாததால் என்று கணவனை தந்தது.

சந்தோஷத்தில் திளைத்தபடி நான்.

மீண்டும் வெறுமை சிறிது காலத்திற்கு பிறகு

கேள்வி குறியோடு காலத்தை நோக்கினேன்.

நீ அன்பை கொட்ட ஆள் இல்லாததால்

என்று மகனை கொடுத்தது.

ஓ,இன்று அன்பு மட்டுமே சுரக்கும்

அட்சய பாத்திரமாய் என் மனது.

தாய்மை வெறுமையை வென்றது.

கொடுப்பதில் இருக்கும் சுகம் பெறுவதில் இல்லையோ.

இதை முதலில் செய்து இருக்கலாமே என்றேன் காலத்திடம்.

விதை தான் மரமாகும் என்று கூறி சென்றது காலம்.

காலம் ரொம்ப விந்தையானதுதான்.

வாழ்க்கை பந்தயம்

எல்லோரும் ஓடுகிறார்கள் இந்த பந்தயத்தில்

சிலர் காரில்,
சிலர் பைக்கில்,
சிலர் சைக்கிளில்,
சிலர் மாட்டுவண்டியில்,
சிலர் கால்நடையாய்

கால்நடையாய் போகிறவன் ஓடுகிறான் மாட்டுவண்டிக்காக,
மாட்டுவண்டியில் போகிறவன் ஓடுகிறான் சைக்கிளிலுக்காக,
இப்படியே தொடர்கிறது இவர்களது ஓட்டம்.

தனக்காக ஓடவில்லை இவர்கள் யாரும்
தனது தலைமுறைக்காக ஓடுகிறார்கள்.

தன்னை முந்துபவர்களை பொறாமையாய் பார்த்தவண்ணம்,
தன்னைவிட பிந்தியவனை ஏளனமாய் பார்த்தவண்ணம்,
தன்னுடன் சமமாக வருபவனிடம் சினேக பார்வை கூட வீசாமல்
தன்னை விட முந்தி விடுவானோ என்ற அச்சத்தோடு
ஓடி கொண்டே இருகிறார்கள்,
தொடக்கமும் தெரியாமல் முடிவும் தெரியாமல்.

நீ இல்லாததால்

கண்மூடி சாய்ந்தபடி நான்
விடியலின் சாட்சியாக கதிரவனின் ஒளிகள் என்மேல்
வீதிகளில் மனிதர்களின் ஆரவாரம்
மனம் உன் நினைவை அசை போட்டபடி
மூளையோ இன்றைய வேலைகளை பட்டியலிட்டபடி


என் தோட்டத்தில் அடிஎடுத்து வைக்கிறேன் மெதுவாக
எனக்காக பூத்த மலர்கள் புன்முறுவல் புரிய
என் இதழ்களோ மலராத மொட்டாய்

மற்றவர்கள் பேசுவது விழுகிறது காதில்
எட்டவில்லை அதன் அர்த்தங்கள் மூளைக்கு
இன்று தெரிகிறது எல்லாம் எனக்கு அந்நியமாய்

எனது பொழுது நகர்கிறது மெதுவாக
எல்லா வேலைகளையும் செய்தபடி இயந்திரதனமாய்
என் கண்கள் மட்டும் அலைபேசியை நோக்கியபடி

அலைபேசியின் நாதம் என் செல்களுக்கு புத்துணர்வு ஊட்ட
நலம் என்ற ஒரு வார்த்தை எனக்கு உயிர் ஊட்ட
உன் நினைவில் நான்
உன் வரவை எதிர்நோக்கி

புன்னகை

அன்னையின் அன்புப் புன்னகை
தந்தையின் கண்டிப்புப் புன்னகை
சகோதரியின் பாசப் புன்னகை
காதலர்களின் குறும்புப் புன்னகை
நண்பனின் ஆதரவுப் புன்னகை
கணவன் மனைவியின் உரிமைப் புன்னகை
பணக்காரனின் கர்வப் புன்னகை
ஏழையின் இயலாமைப் புன்னகை
வெற்றி பெற்றவனின் தன்னம்பிக்கைப் புன்னகை
தோல்வி அடைந்தவனின் சோகப் புன்னகை
ஞாநியின் அர்த்தமானப் புன்னகை

ஏனோ இத்தனை புன்னகை இருந்தும்
நம்மை கவர்வது அர்த்தமே இல்லாத
கள்ளம் கபடம் இல்லாத
குழந்தையின் புன்னகையே

எனது தோட்டத்தில் மயில்

முதன்முறையாக அமைந்தது ஒரு மயிலின் வருகை
எனது தோட்டத்தில்

எனக்காக தோகை விரித்து ஆடியபடி மயில்
அதன் அழகில் மயங்கியபடி நான்
மனதின் ஓரத்தில் அதன் வருகை மீது சந்தேகம் தோன்ற
பாராமுகமாய் நான்
சென்றது சிலகாலம் இப்படியே

ஓர் நாள் அமைந்தது சொந்தங்களின் வருகை
எனது தோட்டத்தில்

அவர்களுக்காக தோகை விரித்து ஆடியபடி மயில்
மனதின் ஓரத்தில் பொறாமை தீ எரிய
பாராமுகமாய் நான்
சென்றது சிலகாலம் இப்படியே

சுற்றத்தினர் எல்லோரும் மயிலை புகழ
அவர்களின் அன்பில் மயில் திளைக்க
மனதின் ஓரத்தில் பிரிவின் பயம் எழ
பாராமுகமாய் நான்
சென்றது சிலகாலம் இப்படியே

எனது உணர்வுகள் அத்தனையும் ரசித்தபடி
என்னை மகிழ்விப்பது ஒன்றே வேலையாய்
தோகை விரித்து ஆடியபடியே மயில்

மெதுவாய் மயிலின் அருமை உணர்ந்தது மனது
அதற்கு ஏற்ற இடம் இது இல்லை என்று தெளிந்தது
மனதில் அன்பு வழிய ,அதன் நலம் கருதி
இன்றும் பாராமுகமாய் நான்.

வரமே சாபமாய்

மூச்சிரைக்க ஓடிவந்தான் மன்னன்.
அவனால் கோபித்து கொள்ள முடியவில்லை அவளை.
என்ன செய்கிறாய் நம் மகனை என்றான்.
போக்குகிறேன் அவனது பயத்தை,
மாவீரனாவான் என்றால் அவனது
துணைவி தாய்மை பூரிப்புடன்.
துவண்டு போனான் காதலன்.
உரிமை கோருவானோ
ராஜ்ஜியத்தில் என்று.
முகம் அறிந்து மனம் உணர்ந்தவள் சொன்னால்
நாட்டில் அல்ல,பாசத்தில் என்று.
கண்ணீர் விட்டான் மன்னன்
மெதுவாய் தலை கோதி,
விரல் பிடித்து சொன்னால்
தெரிந்து தானே வந்தேன் என்று.
தெளிந்த மன்னன் ஆரத்தழுவினான் மகனை.
கனத்த மனதுடன் அரண்மணை
நோக்கி சென்றான்.
மெதுவாய் மகனை அனைத்தபடி
சென்றால் எதிர் திசையில் அவள்.

பெண்ணின் மனம்

நண்பர்களின் கவிநடையில் மனம் லயிக்க
நாமும் எழுத வேண்டும் என்ற ஆசை எழ
புலியை பார்த்து சூடு போட்ட பூனை
நிலை ஆகிடுமோ என்ற பயமும் எழ
பயத்தினை ஆசை வெல்ல
இதோ உங்கள் முன் நான்

பெண்ணின் மனம்

மங்கையவள் மனதை புண்படுத்தினால்
          என புலம்பும் மன்னவனே.
மங்கையின் மனதினை புண்படுத்திய
           நின் செயல் அறியாயோ.
தொட்டால் சிணுங்கி இவள் என தெரிந்திருந்தும்
          பல முறை தொட்டு விட்டு
சிணுங்குகிறாய் என புலம்புவதால் பயனேதுமுண்டோ.
       
        காரணம் கேட்கிறாயே,
அது கூட புரிந்து கொள்ள முடியாத அளவிலா
        உன் பிரியம்.
காரணம் அறிந்து,முரண்பாடுகள் களைந்து நீ வீசும்
         ஒளியின் விடியலுக்காய்
காத்திருக்கும் மங்கையின் மனம் அறியாயோ...

அழகோவியம்



தூங்குகின்ற மகனை எழுப்பும் முயற்சியில் நான்.
அழகான ஓவியமாய் தூங்குகின்ற மகனை
நோக்குகையில் அன்பு பொங்க,
மெதுவாய் நெற்றியில் நான் முத்தமிட,
என் ஸ்பரிசத்தை உணர்ந்தவன்
கண் விழிக்காமல், இதழ் விரிக்கும்
அழகினுற்கு ஈடு உண்டோ இத்தரணிதனில்

மரணம்



தூக்கம் தான் இதன்  ஒத்திகையோ
தவம் தான் இதன்  முன்னுரையோ
அறிந்திட்ட சித்தர்களும் மெளனம் காக்க
அறியாத பலபேர் விளக்கம் சொல்ல
குழப்பத்தில் எனது மனம்

சில மரணங்கள் மனம் கலங்கடிக்க
சில மரணங்கள் பயம் எழுப்ப
சில மரணங்கள் பாடம் புகட்ட

மரணபயத்தை மனம் ஆராய
காரணமாய் மன்னவனின் முகமும்,
மகனின் முகமும் கண்முன் விரிய
அவர்களுக்காய், அவர்களுடன் வாழும் ஆசை எழ
மரணத்தை பயத்துடனே பார்க்கும் பலபேரில்
ஒருத்தியாய் நான்

என் மகன்



என் உலகத்து சூரியன் அவன்.
அவனை சுற்றியே எனது வாழ்க்கை.
அவனுக்காகவே எனது ஒவ்வொரு செயலும்.
ஒவ்வொரு நொடியும் அவனது
குறும்புகளை இரசித்தபடி,
வளர்ச்சியை வியந்தபடி,
செல்ல சண்டைகள் போட்டபடி,
கால கடிகாரம் நகர்கிறது மெதுவாய்.
வற்றாத சுனைநீராய் எனது அன்பு.
வார்த்தைகள் போதவில்லை சொல்ல,
செயல்களாலும் முடியவில்லை
முழுதாய் உணர்த்த.
மலைத்து நிற்கிறேன் செய்வது அறியாது.
கண்களில் வழியும் பாசத்தை உணர்ந்த மகனோ
அழகாய் புன்னகைக்க
அதில் மெய்மறந்தபடி நான்.

கொன்று விடு




கொன்று விடு மனதின் வெறுமைகளை
மனிதன் வாழ்வு சில நாளாம்
அதில் உணர்வுகள் தான் எத்தனை

எல்லாவற்றிக்கும் ஆசைப்பட்டு
எல்லா நிலையிலும் போராடி
நினைத்தது கிடைக்கும்பொழுது
எத்தனை வெறுமைதான் மனதினில்

மகிழ்ச்சியான தருணத்திலும் வெறுமை
இகழ்ச்சியான தருணத்திலும் வெறுமை
கவலையான தருணத்திலும் வெறுமை
வெறுமை கொல்ல வழியேதும் உண்டோ இப்பாரினிலே

தாமரை இலை தண்ணீர் போல
வாழ்ந்து என்ன பயன் இவ்வுலகினிலே

தெரியவில்லை எல்லாம் முழுதாய் அனுபவிக்க
முயற்சித்தும் முடியவில்லை
இது வரமா சாபமா
அதுவும் தெரியவில்லை

வாழ்நாள் முழுதும்
வழிகாட்டும் குருவிற்காக ஏங்கியபடி
என் பயணம்....................

குழந்தை பருவம்



எதுவும் அறியா பருவம்.
மழலை மொழியால் கவரும் பருவம்.
முதன்முறையாய் எல்லாம் பயிலும் பருவம்.
மகிழ்விப்பதற்காகவே இந்த பருவம்.
எல்லோரும் விரும்பும் பருவம்.
தாயின் துணையுடன் உலகை ரசிக்கும் பருவம்.
எல்லா குறும்புகளும் ரசிக்கப்படும் பருவம்.
எல்லா தவறுகளும் மன்னிக்கப்படும் பருவம்.
எனது குழந்தை பருவத்தை புகைப்படத்தில் ரசித்தபடி.
மகனுக்காக அவனது புகைப்படத்தை சேர்த்தபடி நான்.

முதுமை பருவம்




அன்பிற்காக ஏங்கியபடி,
குழந்தைகளின் அலைப்பேசிக்காக காத்திருந்தபடி,
பேரப்பிள்ளைகளின் வருகைக்காக தவமிருந்தபடி,
அர்த்தம் தெரியாமல் வாழ்ந்த
வாழ்க்கையை அசைப்போட்டப்படி,
வெள்ளை முடியின் கம்பீரத்தை ரசித்தப்படி,
இளமையின் வேகத்தில் ஓடும் மனிதர்களை
பார்த்து மெளனமாக புன்னகைத்தபடி,
சுருங்கிய தோல்களை,தளர்ந்த நடையை
பார்த்து இது தான்தானா என்று வியந்தபடி,
கேட்பார் யாருமில்லை எனத்தெரிந்தும்
அறிவுரை வழங்கியபடி,
ஆசைகளை அடக்கியபடி.......
மரணத்தை எதிர்பார்த்தபடி...........

அவள் இவள்





அவள் இதமான தென்றல்
இவள்  அழகான சூறாவளி

அவள் அமைதியான நதி
இவள் காட்டாற்று வெள்ளம்

அவள் கோபத்தையே அறியாதவள்
இவள் கோபத்தையே சுவாசிப்பவள்

அவள் எதையும் நம்புபவள்
இவள் எதையும் சந்தேகிப்பவள்

அவள் அன்பு இதமான மழை
இவள் அன்பு புயல் மழை

அவளிடம் தாயின் பொறுமை
இவளிடம் குழந்தையின் பிடிவாதம்

அவளின் கோபத்திலும் மென்மை இருக்கும்
இவளின் அன்பிலும் வன்மை இருக்கும்

அவள் தோல் கூட இனிக்கும் மாங்கனி
இவள் முள் கொண்ட அன்னாச்சி

அவள் கைப்பிடித்து இவள்
இருவரும் இணை பிரியா தோழிகள்

என் தோழியின் மகனே





என் தோழியை மீளாத் துயரில் ஆழ்த்தி
காலனிடம் சென்ற பூந்தளிரே...................
ஐயிரண்டு திங்கள் மட்டுமா, ஐயிரண்டு வருடங்கள்
தயாராக இருந்தாலே,உன்னை சுமக்க..........
ஏன் அவசரப்பட்டாய் தங்கமே.......

தலைக்கருவை இழப்பதன் வலி
மரணம் வரை துணைவருமே.......
எத்தனை கனவுகள்
சுமந்திருப்பாள் மனதினில்
அத்தனையும் கானல்நீராக்கி
ஏன் பிரிந்தாய் செல்லமே.....

கண்ணீரால் உள்ளத்துயர் அவள் கரைக்க
சொந்தங்கள் செய்வதறியாது சுற்றி நிற்க
காலங்கள் பல உருண்டோட......
இன்று மற்றவர்களுக்காக அவள் புன்னகைக்க.....
துயர் உணர்ந்த நான் அவளின் கைப்பிடித்தபடி.....

முகமூடி மனிதர்கள்




கோமாளியின் முகமூடிக்கு பின்
இருக்கும் ஆழ்ந்த சோகம்
தைரியசாலிகளின் முகமூடிக்கு பின்
இருக்கும் நம்பமுடியாத கோழைத்தனம்
கோழைகளின் முகமூடிக்கு பின்
இருக்கும் வியப்பில் ஆழ்த்தும் தைரியம்
நல்லவர்கள் முகமூடிக்கு பின்
இருக்கும் ஒரு அருவருப்பான முகம்
கெட்டவர்கள் முகமூடிக்கு பின்
இருக்கும் ஒரு அழகான முகம்
சுயம் காட்ட இயலாத முகமூடி மனிதர்கள்
சாத்தியமா  முகமூடி  இல்லாத வாழ்க்கை
மிக சிலரிடம் சில நிமிடங்கள் மட்டுமே சாத்தியம்
முக மூடியே வாழ்க்கை ஆனதால்...........
அடையாளம் தெரிவதில்லை அவர்களை
முகமூடி இல்லாமல்

புத்தியும் மனமும்






மனம் எங்கு சென்றாலும்
புத்தியும் சென்றது
பாதுகாப்பிற்காக............

சில இடங்களில் தனியாக
செல்ல விரும்பியது மனது.
கடும் எதிர்ப்பு புத்தியிடமிருந்து

புத்தி செய்த எச்சரிக்கையை
மீறி சென்றது மனம்........
கவச குண்டலம் இல்லாத கர்ணன்
நிலமை ஆனது மனதிற்கு…........

குற்றுயிரும் குலை உயிருமாய்
மனம் வந்தது திரும்பி........
மனதை மெதுவாய் தேற்றியது புத்தி

 இன்று புத்தி எனும் ஆமைகூட்டில் மனம்
எதுவும் பாதிக்காமல்......
எதையும் சிந்திக்காமல்..........
எதற்கும் கவலைபடாமல்.......
பாதுகாப்பாய்...........

மகனின் முதல் ஸ்பரிசம்

 

ஒவ்வொரு செல்களிலும் சந்தோசம்
மனதில் பொங்கி இதழ்களில் வழிகிறது.
மகிழ்ச்சி மட்டுமே என்னை சுற்றி
தேடுகின்றன கண்கள் பரபரப்பாய்......
ரோஜா மலரை துணியில் சுற்றியது
போல் என் மகன்.....அம்மாவின் கைகளில்

மெதுவாய் கைகளில் ஏந்துகிறேன் பூபோல
உலகத்தின் மொத்த சந்தோசமும் கைகளில்
வந்தது போன்ற உணர்வு மனதில்.......
அவனது கைவிரல்களை தடவுகிறேன் மெல்ல
மேகத்தை தொட்ட சிலிர்ப்பு என்னுள்....

என்னுள் அணுஅணுவாய் செதுக்கப்பட்டவன்
பத்து மாதங்களின் தவம் அவன்.......
கண் விழித்து எனைப் பார்க்க
என்னையே மறந்த நிலை எனக்கு

அவன் அழுகுரலே இசையானது.....
அவன் சிரிப்பே சொர்க்கமானது.........
அவன் அசைவுகளே உலக அதிசயமானது......
அவனே என் உலகமாகிறான்.