Saturday, November 16, 2013

வார்த்தைகளின் உரசல்கள்

 
ஆகப்பெரும் சண்டையாக
முடிந்திருந்தது வார்த்தைகளின்
உரசல்கள் முன்னறிவிப்பேயில்லாமல்
 
இப்படி முடியுமென்ற
சிறு சாயலுமில்லை
தொடக்கத்தில்..........
 
இருவருக்குமே பொதுவான களமென்பதால்
வார்த்தைகளில் உரசல்கள் சிறிது
மூர்க்கமாகவே இருந்தன.
 
விழுந்து சிதறிய வார்த்தை
உடைத்து சிதைத்தது
நம்பிக்கை பாத்திரத்தை
 
உடைந்ததை ஒட்டிவைக்கவும்
தேவையாகவே இருக்கிறது
வார்த்தைகள் மூர்க்கமான அன்புடன்....
 

இருந்துவிட்டு போகட்டுமே



மை தீர்ந்த பேனா,
துணி கிழிந்த குடை,
உடைந்த வளையல்,
சாக்லேட் பேப்பரால்
தோழி செய்த பொம்மை,
நண்பன் ஒருவனின்
கையெழுதிட்ட
கிழிந்த காகிதம்,
தங்கையிடம் சண்டையிட்டு
பிடுங்கிய முகம்
சிதைந்த மரப்பாச்சி,
அம்மாவின் கனவுகள்
புதைந்த ஓர் ஓவியம்,
அப்பாவின் செல்லரித்த
குழந்தை படம்,

இருந்துவிட்டு போகட்டுமே
எனக்கானதாய் என்றுமே
உபயோகமில்லையெனினும்
பெரும் பிரபஞ்சத்தின்
ஓர் மூலையில்.................

ஒற்றைவார்த்தை



இந்த ஒற்றைவார்த்தை
இத்தனை பாதிப்பை
ஏற்படுத்துமென கனவிலும்
நினைத்ததில்லை

அத்தனை வெறுப்புக்களையும்
திணித்து இவ்வார்த்தையை
உருவாக்கியிருப்பாயோ????

நுகர்ந்த ஓர் நொடியில்
கசந்துவிட்டது இதயம்.

இனி எத்தனை அன்புத்தண்ணீர்
கொட்டி கரைக்கப்போகிறாய் இக்கசப்பை.
கரையக்கூடியதுதானா இதுவென்றும்
உறுதியாய் தெரியவில்லை

கலையாத மேகம்





 
அரவணைப்பிற்காக ஏங்குகையில்
அருகினில் இருந்ததில்லை

கைகுலுக்க தேடுகையில்
கால்கடுக்க ஓடுகிறாய்
திரும்பியே பாராமல்

எண்ணங்களை பகிர நினைக்கையில்
எதிரிபோல் மாறிவிடுகிறாய்

நிழலெனுக்கு என்கிறாய்
நிச்சயமாய் பார்க்கவில்லை
நானுன்னை முப்பொழுதும்

கனவினில் மட்டுமே
கலையாத மேகம் நீயெனுக்கு


Thursday, November 14, 2013

ஆசீர்வதிக்கப்பட்ட தினம்


இன்று ஏதோ ஆசீர்வதிக்கப்பட்ட தினமாகவே தோன்றுகிறது. என் மீது அக்கறையும் அன்பும் கொண்ட சகோதரனை கண்டெடுத்த நொடியை தன்னுள் புதைத்ததால் இந்த நாள் அப்படித்தோன்றுகிறதோ.

எத்தனை பெரிய எழுத்தாளராக என்னிடம் அறிமுகமாகிய நொடியில் விழிவிரிய பார்த்து “பேசமுடியுமா” என்று ஏங்கிய நொடியை தின்று அன்பு சகோதரன் என்று கூறிய நொடி உள்ளத்துள் பொக்கிசமாக புதைக்கப்பட்டது.

மனம் சந்தோச மிகுதியில் மெளனமாக கத்துவது பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு இடத்தில் பெரும் ஒலியாக கேட்கக்கூடும்

# அன்புக்கு பாத்திரமாதல் எத்தனை ஆனந்தம்

சிறு புள்ளி நான்



பிரபஞ்சத்தை பிரதிபலிக்கும்
சிறு புள்ளி நான்........

விடுதலை



ஆகப் பெரும் போராட்டம்
செய்ய நேர்ந்தது இரும்பு
கம்பிகளை வளைத்து
அச்சிறுகிளியை கையிலேந்த
...
பெரும் அன்போடு அணைத்து
உச்சிமுகர்ந்து செவிகளில்
கிசுகிசுத்தேன் பறந்து போ
பெருவெளியில் என்றே......

எதற்கு?? எங்கே?? எப்படி?? என்றது.

Sunday, November 10, 2013

அப்பறவை



மெளனித்த ஒரு பொழுதில்
பிடிதளர்ந்த ஓர் நொடியில்
நகர்ந்து விட்டிருந்தது
கண் தெரியாத சிறுபறவை
குரல் செவிக்கெட்டாத தூரத்திற்கு..........

பார்வையிலிருந்து மறைவதை
மெளனமாக படம்பிடிக்கிறேன் மங்களாய்
கண்ணீரால் நிரம்பிய கண்களில்

பிடிதளர்ந்த அந்த நொடி
நிராகரிப்பாய் உணர்ந்திருக்குமோ????
மனம் உடைந்திருக்குமோ?????
என்ன உணர்வுகளால் சூழ்ந்திருக்கும்
அந்தச் சின்னஞ்சிறு இதயம்?????

பிடிதளர்ந்தது நிராகரிப்பால் அல்ல
என்னுள் ஆழ்ந்துபோனதால் என்பதை
உணர்த்தவேனும் ஓரு நொடி அதிகமாய்
என்னுடன் இருந்திருக்கலாம் அப்பறவை.

மெளனச்சிதறல் - 2


வானவில் போல ஆயுள்
சில நிமிடங்களேயானாலும்
மனதில் நீங்கா நினைவுகளை
பதியமிட்டே செல்கிறார்கள்
சில மனிதர்கள் .......
           ----------------------------------------------------------------------------------------------------
 வாடாத மலர்களைச்
சுமந்து கொண்டு
வாடிய மலராய்
பூக்காரி....
           ------------------------------------------------------------------------------------------------------
 சில நிமிடங்களை மனம்
பூட்டி வைத்துக் கொள்கிறது
அழகிய நினைவுகளாக
             -----------------------------------------------------------------------------------------------------
 மனம் அடங்காத குதிரையென்றிருந்தேன்
பழக்கிவிட்டால் கடிவாளமே தேவையில்லாத
அன்பான குதிரை என்று உணர்ந்தேன்

 ------------------------------------------------------------------------------------------------------

ஒத்திவைப்பு தீர்மானங்களில்
உயிர் விடுகின்றன பல செயல்கள்
---------------------------------------------------------------------------------------------------------------

கரைந்து காணாமல் போகிறோம்
அன்பெனும் காற்றில் கற்பூரத்தை போல
 ---------------------------------------------------------------------------------------------

மனதை புண்படுத்தவென்றே
நம்மை நோக்கி எறியப்படும்
வார்த்தைகளை தூக்கி எறியுமுன்
இரண்டு சொட்டு கண்ணீரையாவது
தனதாக்கி கொண்டே அகலுகிறது

 -------------------------------------------------------------------------------------------------------


             உண்டெனும் போது இல்லையென்றும்
இல்லையெனும் போது உண்டெனவும்
மனதின் ஓர் மூலையில் ஒரு எச்சரிக்கை
குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது

 ----------------------------------------------------------------------------------------------

எழுத்துக்களில் கரைக்கப் படும்
உணர்வுகள் உயிர்பெறுகின்றன
அதிக பாரத்தை சுமந்துகொண்டு
ஒவ்வொருமுறை வாசிக்கும் போதும்

 --------------------------------------------------------------------------------------------------

ஒளி தரும் விளக்கின்
நிழலும் கருமை தான்
             -------------------------------------------------------------------------------------------------
 யாரோயென்றென்னும் போது துளிர்க்காத எதிர்பார்ப்பு
யாதுமாகி நிறையும் போது வேர் விட்டு வளர்கிறது.
--------------------------------------------------------------------------------------------------


சாதாரணமானது கூட அதீத
அழகுடன் திகழ்கிறது அன்பெனும்
கண்ணாடி வழி காணும் போது

 -------------------------------------------------------------------------------------------------


ஒரு மனிதனின் பதில்கள் பொய்யை
மட்டுமே தாங்கி வருமானால் அவனுக்கான
கேள்விகள் தற்கொலை செய்து கொள்கின்றன
அல்லது கருணைக் கொலை செய்யப்படுகின்றன.
         -----------------------------------------------------------------------------------------------------
 

மறதியே மனிதனுக்கு
வரமாக பல நேரங்களிலும்
சாபமாக சில நேரங்களிலும்
அமைந்து விடுகிறது

 ------------------------------------------------------------------------------------------------------

உன் நட்பால் மட்டுமே எனைப்
புதிதாக ஜனிக்கவைக்க முடியும்
சோகத்தை,தனிமையை துரத்தி விட்டு
சந்தோஷத்தை மட்டுமே நிரப்புகிறாய்
எனைச் சுற்றி வேலி போல நிற்கிறாய்
முட்களின் கீறல்களை உனதாக்கி கொண்டு
மலரை மட்டுமே எனக்கு பரிசளிக்கிறாய்

 ------------------------------------------------------------------------------------------------


கடந்து வந்த பாதையில்
நம்மைக் குத்திய முட்களை
அகற்றிவிட்டாலும்,அது விட்டுச்
சென்ற பயத்தையும், நம்பிக்கையின்மையும்
பசுமையாய் மனதில் வாழ்ந்துகொண்டே இருக்கிறது.

 -------------------------------------------------------------------------------------------------

சில பிரச்சனைகளுக்கு
மூலகாரணமாக இருக்கிறோம்
நமக்கே தெரியாமல்....

 ----------------------------------------------------------------------------------------------

நிறைவேறாது என்று தெரிந்துமே
சில எதிர்பார்ப்புகள் உயிர்போடு
வலம் வருகின்றன மனதினுள்

 ------------------------------------------------------------------------------------------------

தனக்குத் தானே வட்டத்தையும் போட்டு
அதைத் தாண்டவும் தூண்டுகிறது
விந்தையான மனம்.
              --------------------------------------------------------------------------------------------------

எதிபார்ப்புகள் இல்லாத போது
எளிதாக கடக்க முடிகிறது
எல்லாவற்றையும் உறுத்தல்களில்லாமல்.

 -----------------------------------------------------------------------------------------------------

             சில உறவுகளைக்
கடக்கவும் முடியாமல்
காப்பாற்றவும் தெரியாமல்
தத்தளிக்கிறோம்.

 ---------------------------------------------------------------------------------------------------

புத்தியின் கேள்விகளுக்கு
மனதிடமிருந்து வரும் பதில்
           மெளனமாகவே இருக்கிறது

            பல நேரங்களில்
 --------------------------------------------------------------------------------------------------------

நாம் பிரமிக்கும் பல விஷயங்கள்
மற்றவர்களால் குப்பைகளாக
கணிக்கப்படும் போது உயிர்தெழும்
சிறிதாய் ஓர் வலி மனதின் ஓரத்தில்

 -----------------------------------------------------------------------------------------

தோள் கொடுக்க வேண்டிய நேரங்களில்
கைப்பிடியை மட்டும் தந்து விட்டு
சப்பைக் காரணங்களை தேடி அலைகிறோம்.

 ----------------------------------------------------------------------------------------------

நமக்கான உரிமைகள்
பறிக்கப் படும் நேரத்திலும்
சகிப்புத்தன்மை போர்வைக்குள்
சுகமாய் தூங்குகிறோம்

 --------------------------------------------------------------------------------------------------

 

மெளனச்சிதறல் - 1




விவாதித்து தெளிவு பெறவே

விரும்பினாலும் மனம் அபிப்பிராய

போர்வைக்குள் ஒளிந்து கொண்டு

கண்ணாமூச்சி ஆடுகிறது
-------------------------------------------------------------------------------------

தாங்கத் தோள் கிடைத்ததும்
எல்லாவற்றையும் இறக்கவே
மனம் துடித்தாலும்
தடை போடுகிறது
புத்தியின் தனித்தன்மை
------------------------------------------------------------------------------------------------------
          பெரும் போராட்டங்களுக்குப் பிறகு
அடையும் வெற்றியும் ஏனோ
வெறுமையின் துணைக்
கொண்டே வந்தடைகிறது.
             --------------------------------------------------------------------------------
 எத்தனை முகமூடி போட்டாலும்
சில நேரங்களில் வெளிப்படும்
சிலரின் உண்மையான முகங்கள்
பெரும் அதிர்ச்சியையே உயிர்ப்பிக்கின்றன

 ------------------------------------------------------------------------------------

ஓடிக் களைத்தபின்
ஓய்வாக அமர்கையில்
ஓங்கி அறைகிறது மனதில்,
வாழ்க்கை உண்மைகளை.
          ----------------------------------------------------------------------------------------
 
கடக்க வேண்டிய தூரங்கள்
கண்ணுக்கே தெரியாத போது
கவலை அப்பிக் கொள்கிறது மனதில்.

---------------------------------------------------------------------------

கண்முன் நடக்கும் தவறுகளை
தடுக்க முடியாத தருணத்தில்
வலிகளின் உச்சத்தை உணரமுடிகிறது
            --------------------------------------------------------------------------
 
காலத்தின் கோலத்திலே புள்ளியாய்
காணாமல் கரைந்தே போகிறேன்
கோலத்தின் அழகில் ஆழ்ந்து
கோமகனை நிதமும் நினைந்து
கர்மவினை தனை கலைந்து
தர்ம நெறியில் நடந்து
பிறப்பின் தர்மம் உணர்ந்து
பிறழாமல் வாழ்கிறேன் உலகில்.

 ----------------------------------------------------------------------------

உள்ளத்தின் உவகை யெல்லாம்
வெள்ளத்தில் தஞ்சம் புகவே
உருகியே தவிக்கின்றேன் மாய
உலகத்தின் விளை யாட்டிலே
உன்னிடத்தில் சரணடைய இறையே
உத்தமமாய் எனைக் காத்தாய்
ஊழியின் வேலி தனையே
ஊதியே தள்ளி விட்டாய்
           ------------------------------------------------------------------------------

ஓரங்க நாடகத்தில்
ஓரத்தில் நானிருக்க
ஓங்கியே ஒலிக்கிறது
ஓலங்கள் காதினிலே
ஓதும் மலையினிலே
ஓடியே ஒழிகிறேன்
ஓங்காரமாய் உள்ளிளுக்க
ஓய்வாக கண்மூடுகிறேன்
 
        ------------------------------------------------------------------------------------------
 
நினைவுகளின் சிறகசைப்பில்
நித்தமும் சிலிர்த்திருக்க
நிஜங்களின் சிங்காரத்தில்
நிர்கதியாகி சிரிக்கிறேன்

--------------------------------------------------------------------------------------------

வெற்றிடத்தில் புதியவற்றை வைத்து
நிரப்பினாலும் பழையதின் வாசத்தையும்
நுகரமுடிகிறது சில தருணங்களில்

------------------------------------------------------------------------------------------------- 

     பழுத்த இலைகளின்
உரத்தில் வளர்ந்த
துளிர்கள் நகைக்கின்றன
அதன் தள்ளாமையைப் பார்த்து

 --------------------------------------------------------------------------------

எழுத்துக்களில் சிறிது
வாய்மொழியில் சிறிது
பார்வைகளில் சிறிதென
கரைக்கிறேன் உணர்வுகளை
நிறைகுடமாகவே தளும்பி
வழிகிறது இன்னமும்
          ------------------------------------------------------------------------------------------------
தனது பேச்சிலேயே பிரமிப்பு பிம்பத்தை
உயிர்தெழச் செய்கிறார்கள் சில மனிதர்கள்
 
            ---------------------------------------------------------------------------------------------

வெட்டுவதும்,வெட்டப்படுவதும்
நானாகவே இருப்பதால் மனம்
உணர்ச்சி ஊஞ்சலில் தடுமாறுகிறது

--------------------------------------------------------------------------------------------- 

பேசாமல் இருப்பதற்கும்
அமைதியாக இருப்பதற்கும்
இடையில் கடுகுக்கும்,மலைக்குமான
வித்தியாசத்தை உணர முடிகிறது.
          --------------------------------------------------------------------------------------------------
 சரியெது,தவறெது என்பதை
நமது சுயநல தராசைக்
கொண்டே எடை போடுகிறோம்
          --------------------------------------------------------------------------------------------------
 புத்தகங்களை நேசிக்க, சுவாசிக்க
மனிதர்கள் புதிதாக தெரிகிறார்கள்
            --------------------------------------------------------------------------------------------------
 எத்தனை வார்த்தைகளை வெளியில்
கொட்டி மெளனத்தை விரட்டினாலும்
தனிமை அடர்த்தியாய் நிறைவதை
தடுக்க இயலாமல் சரணடைகிறேன்

 -----------------------------------------------------------------------------------                

சிட்டுக்குருவின் கீச்சுக்களை
அலைப்பேசியின் சிணுங்களுக்கு
இரையாக்கி விட்டோம்

 ---------------------------------------------------------------------------------------

 மாற்றத்திற்காக நாம்
தொடுக்கும் மாலையில்
முதல் பூ நம்முடையதாக
இருப்பதே சிறந்தது

 ------------------------------------------------------------------------------------------

பேசினால் அடர்த்தியாகும்
மன்ஸ்தாபங்களை
தாலாட்டு பாடி
தூங்க வைக்கிறோம்
மெளனத் தொட்டிலிலே

 --------------------------------------------------------------------------------------

           வார்த்தைகளின் போர்க்களத்தில்
முதலில் வெட்டுப்படுவது
அன்பெனும் அமைதிப்புறாவே
           ---------------------------------------------------------------------------------------
மனம் பேசத் துடித்தாலும்
இதழ்க் கதவைத் திறக்க
முடியாமல் தவிக்கும் வார்த்தைகள்
வெளிவருகின்றன கண்கள் வழி
ஒற்றை கண்ணீர் துளியாய்