Thursday, November 22, 2012

காலைப் பொழுது



புலரும் பொழுதுகள் அறிவதில்லை
கலைக்கப்பட்ட கனவுகளின் வலியை.
கண்விழித்த சில நொடிகள்
கரைகிறது கனவின் வீச்சத்தோடே

அடிக்கடி பார்க்கும் கண்மலர்களால்
சில மணித்துளிகளுக்கு பரபரப்பை
பூசிக் கொள்கிறது கடிகார முட்கள்

பரபரப்புகள் அடங்கியபின் நீண்ட
அமைதியை போர்த்திக் கொள்கிறது காலை.
கண்மூடி காலைக் கனவை துழாவுகையில்
துடைக்கப்பட்ட கரும்பலையாக காட்சியளிக்கிறது.
 
அறைகளில் பரவும் திடீர் அமைதி
தனிமையை இட்டு நிரப்புகிறது மனதில்.
தனிமை வீணையின் நரம்புகளை மீட்டி
ஒலியெழுப்புகிறது சில நினைவுகள்.

நினைவுகளின் பாதையில் பயணிக்கையில்
தட்டி எழுப்புகிறது மயங்கிய மனதை
அடுத்த வேலைக்கான அழைப்பு........
 

1 comment: