பொருநையில் பொதிந்த
பொழுதுகளில்
புலரும் என் நினைவுகளில்
கழிகிறது காலம்.
என் கண்ணசைவில் உயிருணரும்
வித்தகனாய் நீயிருந்தாய்
நிழல் போல என்னருகில்
அன்று அத்தனை வார்த்தைகளும்
மெளனம்தின்ன
மொழிமறந்து மெய்மறந்து
ஊமையாய் வீற்றிருந்தேன்
மகுடிக்காடும் பாம்பு போல
உன் சொல்லுக்கு ஆடியது
என் உயிரின் செயல்கள்
நடுங்கும் கரங்களில் உணர்ந்த அன்பில்
மெதுவாய் நீ அணைக்க
உயிர் உருகி உன் தோள் சாய
அந்த மணித்துளியை
மனமும் மனனம் செய்ய
உள்ளுக்குள் நிகழ்ந்திட்ட
அற்புதமே அமுதென
உயிர் காக்கும் இரகசியம் அறியாயோ
உன் ஓர் தீண்டலில்
உயிர்த்திட்ட செல்களெல்லாம்
இன்னொருபிறவிகான காத்திருக்கிறது
உன் மறுதீண்டலில்
ஒட்டகமாய் உன் நினைவுகளை
சேர்த்து வைத்து உயிர் வாழ்கிறேன்
உனை மறுமுறை காண....
No comments:
Post a Comment