சில வருடங்களுக்கு முன் மாமல்லபுரம் சென்ற போது மாமல்லர்,
மகேந்திர பல்லவர்.சிவகாமியின் எண்ணங்களே மனதை ஆக்கரமித்து இருந்தன.அந்த மனிதர்களின்
பாதச் சுவடுகள் படிந்த இடம் இது என்ற எண்ணமே மனதில் மின்னலடித்துக் கொண்டிருந்தது.
அவர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த இடம் எப்படி இருந்திருக்கும் என்ற எண்ணவோட்டம் மனதில்
ஓடியது. பல ஆயிரம் சிற்பிகள் வேலை செய்ய, உளியின் ஓசை விடாமல் கேட்டுக் கொண்டே இருந்திருக்கும்.
எத்தனை சிற்பிகளின் உழைப்பு,
அன்று அவர்கள் யோசித்து கூட பார்த்து இருக்க மாட்டார்கள்
இத்தனை காலம் கடந்தும் அவர்களின் உழைப்பு உயிரோடு இருக்கும் என்பதை. இரவு பகல் பாராமல்
சிற்பம் செய்வதை தவம் போல் செய்திருப்பதை ஒவ்வொரு கல்லில் செதுக்கிய சிற்பமும் பறைசாற்றுகிறது.
மெதுவாக கால்கள் மண்ணில் புதைய நடந்த போது அவர்களின் பாதங்களையும்
இந்த மண்கள் தீண்டி இருக்கும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. கூடவே கல்கியின் நினைவும்
மனதில் தோன்றுவதை தடுக்க இயலவில்லை. வெறும் மதிப்பெண்களுக்காக மட்டுமே மனனம் செய்து
கொண்டிருந்த சோழ, பல்லவ சாம்ராஜ்ஜியங்களை இரசித்து இரசித்து படிக்க வைத்த பெருமை கல்கியையே
சாரும்.
திருமணம் ஆன புதிதில் தஞ்சாவூர் பெரிய கோவில் சென்ற போது
கோவில் என்பதையும் மீறி இராஜ இராஜ சோழன் சுவாசமே அங்கே நிறைந்திருப்பதை போன்ற ஒரு பிரம்மை
தோன்றியது. இது கல்கியின் எழுத்துக்கள் செய்த மாயம். கல்கி படைத்த பாத்திரங்களை பற்றி
பேசவே நட்புகளை துழாவிய காலங்கள் உண்டு. பாத்திரங்களின் தன்மைகளைக் குறித்து பெரிய
விவாதமே நடக்கும் நட்பு வட்டத்தில்,.
“அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல் தான் பொங்குவதேன்” என்ற
பாடல் இளமையாய் இன்றும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.அவரின் ஆராய்ச்சி அசர
வைக்கிறது.சோழர்கள்,பல்லவர்கள் பற்றி அறிந்ததை கட்டுரையாக குடுக்காமல் அழகிய நாவலாக
படைத்து அதில் அவர்களை உயிருள்ள பாத்திரமாக நடமாட வைத்து நமது மனங்களை கொள்ளை அடித்து
இருப்பார்.
இலங்கையில் உள்ள வீதிகளையும்,விழாக்களையும் எழுத்துக்களால்
கண்முன் கொண்டு வந்திருப்பார். பூங்குழலி கதாபாத்திரம் மனதில் சொல்லமுடியா பாதிப்பை
ஏற்படுத்தியது.அவளின் இரவு நேரம் படகுப் பயணத்தில் நாமும் சேர்ந்தே பயணித்து இருப்போம்.
ஒரு எழுத்தாளனின் மகத்தான வெற்றி படித்து பல காலம் ஆகியும்
அவரது எழுத்துக்கள் மனதை விட்டு அகலாதிருப்பது தான்.நான் பார்த்து வியந்த முதல் எழுத்தாளர்
கல்கி அவர்கள்.ஒவ்வொரு சரித்திர நாவலிலும் அவரது மெனக்கெடல் நன்றாகத் தெரியும்.
இராச இராச சோழனையும்,மாமல்லனையும் நினைவு கூறும் பெருமை தஞ்சைக்கும்
மாமல்லபுரத்திற்கும் இருந்தாலும் அவர்களை நன் மனதில் உயிரோடு நடமாட வைத்த பெருமை கல்கியையே
சாரும் என்பது மறுக்க முடியாத உண்மை.
ஒரு அருமையான படைப்பாளி பற்றி வாசகியாகி உங்களின் அற்புதமான படைப்பு...
ReplyDeleteஅழகா எழுதியிருக்கீங்க...
என்ன இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம்...
இருந்தாலும் அருமை..
வாழ்த்துக்கள்...
தொடர்ந்து இதுபோன்ற படைப்புக்களை எதிர்பார்க்கிறோம்...