Saturday, September 15, 2012

விடைபெறுமுன்


 
விடைபெறுமுன் ஆயிரம் நாடகமாடுகிறாய்
காலத்தை கடத்துவதற்காக, ஊமையாய்
இரசித்து விட்டு உள்ளுக்குள் சிரிக்கிறேன்.

கடிகார முள்ளை கண்களாலேயே சிறைசெய்து
காலத்தை சிறைப்பிடிக்க எத்தனிக்கும்
உன் செயலில் தெறிக்கும் அன்பில்
நனைந்து மலர்கிறது மனமொட்டு.

பிணைந்த விரல்களில் ஆயிரம் கவிதைகள்
தீட்டி உதிரத்தில் கரையச் செய்கிறாய்.
கடைசி சுவாசத்தில் எல்லாம் கொட்டத்
துடிப்பது போல் ஒரு நொடிக்குள்
கடலளவு அன்பைக் கொட்டுகிறாய்.

அன்பின் வெப்பத்தை தாங்காது உயிர்
உருகி கண்ணீராக கன்னங்களில்
பெருக்கெடுக்க, உன் விரல்களால்
அணைபோடுகிறாய் அணைத்தபடி.
 
பிரியா விடை பெறுகிறேன் பிரியத்துடன்.
பிரியும் நொடி முத்தப்பூ விதைத்து
இதழ்களோடு இரகசிய ஒப்பந்தம்
போடுகிறாய் அடுத்த சந்திப்புக்காக.

மனதில் உன் நினைவுகளை சுமந்துபடி
கண்களில் உன் உருவத்தை சுமந்துபடி
உயிரினில் உன் காதலை சுமந்துபடி
விடைபெறுகிறேன் உன்னிடம், அடுத்த
சந்திப்பிற்கான கனவுகளை சுமந்த படி.......................
 

No comments:

Post a Comment