Saturday, March 3, 2012

அகமுடையான்



புத்தியில் பயம் துளிர்க்க
மனதில் சிறு கிறக்கத்துடன்
கைப்பற்றி அக்னி வலம் வந்து
வாழ்க்கையில் நீ நுழைந்த நாள்
பசுமரத்தாணியாய்
பதிந்துவிட்டது கண்களிலே


குழந்தைக்காக
நான் உருகித் தவிக்க
எங்களுக்காக மெளனமாய்
நீ வடித்த கண்ணீரின் ஈரம்
காயலையே காலங்கள் கடந்தும்
நெஞ்சினிலே.


நிலா முற்றத்தில் நாம்
பேசித் தீர்த்த வார்த்தைகள்
இன்னும் ஒலிக்கிறதே
இளமையாய் செவிகளிலே.


முட்கள் நிறைந்த பாதையை
உன் கரம் பற்றி கடந்து
பல காலம் ஆனாலும்
உன் கையின் வெதுவெதுப்பு
இருக்குது என் கையினிலே.


சின்ன சின்ன ஊடல்கள்
செல்ல சண்டைகள்
அனைத்தும் நம் காதல்
வளர்க்கும் உரமாக
அழகாய் பூத்துக் குலுங்குகிறது
நம் காதல் மரம்.
 

நீருக்காய் ஏங்கும் நிலமாய் நானிருக்க
பெருமழையாய் என்னுள் இறங்கி
என் குழந்தைத்தனத்தை
மீண்டும் துளிர்க்க வைத்தவன் நீ.
 

இன்னொரு பிறவி
இருக்குமானால்
உனக்கு அன்பை மட்டுமே
தரும் தாயாகும்
வரம் வேண்டுகிறேன்
இறையிடம்.


No comments:

Post a Comment