Sunday, March 25, 2012

விதவை



கட்டிய கூடு புயல்காற்றில்
சிதைந்தது போல்,
உனை இழந்து தவிக்கிறேன்
ஓர் நொடியில்.

 உன் சிரிப்பின் எதிரொலி
அடங்கும்முன் ஆவிஅடங்க
ஆற்றாமையின் உச்சத்தில்
உறைந்து நிற்கிறேன்.

எனை முழுமையாய் ஆண்டவன்
இன்று பிடிசாம்பலாய்
குவளையில் அடைய,
படல் இழந்த கொடியாகிறேன்.

அரவணைப்பின் கதகதப்பில்
பிறக்கப் போகும் வாரிசுக்காய்
அட்டவணையிட்ட எதிர்காலம்
அடியோடு தகர்ந்த்தை
விதியென நினைத்து
வாழ்கிறேன் விதவையாய்.

வாழ்ந்த ஒவ்வொரு நொடியும்
விழிமுன் காட்சியாய் விரிய
விழிதிரையை நீர் மறைக்க
வீழ்கிறேன் காலத்தின்முன்
வழிதெரியாத குருடன் போல்.

இணையை இழந்ததால்
இனிமைகள் இல்லாதுபோக
இல்லாத இல்லறத்தில்
இனிமையான நினைவுகளோடு
இனிவரப்போகும் நம் குழந்தைக்காக
இயங்குகிறேன் இயந்திரமாய்.
 

No comments:

Post a Comment