Wednesday, March 28, 2012

கொள்வாயா, கொல்வாயா


தொடுவானமாய் காட்சியளித்து
நெருங்கி வருகையில்
விலகிச் செல்கிறாய்.........

பேசா பொழுதுகளில்
உயிர் துடிக்கிறாய்.
பேசும் நொடிகளில்
புறக்கணிக்கிறாய்.
 
கோட்டைகள் கட்டுகிறாய்
ஆவலாய் நுழைகையில்
தரைமட்டமாக்குகிறாய்.

 உன் அழகிய மொழிகளில்
மயங்கி அருகில் வர
மெளனம் கொள்கிறாய்.
மெளனத்தை மொழிபெயர்க்க
முடியாமல் விலகுகையில்
கார்மேகமாய் அன்பைப்
பொழிந்து திணறடிக்கிறாய்.

முழுவதுமாய் அறிந்தவளென
இறுமாப்பு கொள்ளுகையில்
ஒன்றுமே அறியாதவளென
உணரவைக்கிறாய்
உனது செயல்களால்....

நீ எரியும் மெளனக் கற்களால்
குழம்பிய குட்டையாகிறேன்.
அதிலும் உன் நலம் நாடியே
துடிக்கிறேன் அணுஅணுவாய்.

புரிந்து கொள்வாயா
விலகிக் கொல்வாயா
 

No comments:

Post a Comment