இலையிடை புகுந்து
காதலியைத் தேடும்
கதிரவனின் கதிர்களாய்
மனமும் உன்னைத்
தேடியே அலைகிறது.
என் மெளனவிரதமெல்லாம்
கல் பட்டுத் தெறிக்கும்
கண்ணாடியாய் கலைகிறது
உன் விழிப் பார்வையாலே.
நயாகரா வீழ்ச்சியாய்
கொட்டிய உன் அன்பெனும்
தேன் தடவிய வார்த்தைகள்,
இன்று வற்றிய குளமாய்
போனதன் காரணம்தேடியே
அலைகிறது மனசு.
செல்லரித்த புத்தகமாகிறேன்
உன் நினைவுகள் கொல்வதாலே.
முற்றுப்புள்ளியாய் நீயில்லாத்தால்
முடிவுரா வாக்கியமாய்
தொற்றியே நிற்கிறேன்.
தாய் கண்ட சேய்போல்
ஓடிவருகையிலே
மேகத்தின் பின் மறைந்து
கண்ணாமூச்சி ஆடுகிறாய்.
நீ உதிர்க்கும்
அன்பில்லா வார்த்தைகளால்
திராவகம் குடித்த புழுவாய்
துடிக்கும் மனதை மறைக்க
கோபமெனும் கவசம் அணிகிறேன்.
சண்டை போட்டுப் பிரிந்திருந்தால்
சட்டைசெய்யாது இருந்திருப்பேன்.
பிரியம் சொல்லிப் பிரிந்ததால்
உன் நினைவுகள் தின்று
உயிர்த்திருக்கிறேன் உனக்காக.
No comments:
Post a Comment