Wednesday, September 18, 2013

கலையாத கனவு



கூண்டு திறந்தபிறகும்
பறக்காத பறவையாக
மனக்கூண்டில் அமைதியாக...
தன்னை இருத்திக்கொள்கிறது
நேற்று பிறந்த ஓர் கனவு.

பரபரப்பு காலையில்
கதவடைத்த பின்னும்
கிடைத்த ஓட்டையில்
தலையெட்டிப் பார்க்கும்
தென்றலாக, பரபரப்பிலும்
லேசாக கசிகிறது உள்ளத்தில்.

ஒட்டிக் கொண்டே சுற்றும்
பூனைக்குட்டி போல
புத்தியில் வட்டமிட்டு
மெல்லிய புன்னகை
பூக்க வைக்கிறது.

கடிகாரத்தின் அபாய
எச்சரிப்பில் ஓர்
அதட்டு அதட்டி
அடக்குகிறேன்.
மூலையில் ஒடுங்கிறது
அழும் குழநதையாக....

கடமைகள் முடித்து
கனிவாக அழைக்கையில்
கோபித்து கொண்டு
வெளிநடப்பு செய்துவிட்டது
தேர்ந்த அரசியல்வாதியாக.....

No comments:

Post a Comment